ஓசூர், ஏப்.1: ஓசூரில் உள்ள பேகேப்பள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட சரஸ்வதி நகரில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சரஸ்வதி நகர் அருகே சமூக விரோதிகள் சிலர், அங்கு கொட்டி கிடக்கும் மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை இரவு நேரத்தில் தீ வைத்து எரிக்கின்றனர். இதில் கொளுந்து விட்டு எரியும் தீயால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறிவிடுகிறது. இதனால் அருகில் உள்ள வீடுகளில் புகை பரவி அவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. காட்டுத்தீ போல் குப்பை எரிவதால், அருகில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் நீடித்து வருகிறது. இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஊராட்சி அலுவலகத்தில், பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
