போலீஸ்காரரை கொல்ல முயன்றவர் குண்டாசில் கைது

ஓசூர், ஏப். 3: ஓசூரில் போலீஸ் ஏட்டுவை கார் ஏற்றி கொலை செய்ய முயன்ற வாலிபரை, போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி சோதனை சாவடியில் சிப்காட் போலீசார், கடந்த 15ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், காரை ஓட்டி வந்த நபர், காரை தடுத்து நிறுத்திய போலீஸ் ஏட்டு ராஜீவ் காந்தி மீது மோதி விட்டு வேகமாக நிற்காமல் சென்றார். இதில் நிலைதடுமாறிய ஏட்டு ராஜீவ்காந்தி காரின் முன் பக்க பேனட்டில் விழுந்துள்ளார். அதனை பொருட்படுத்தாமல், அந்த நபர் தொடர்ந்து காரை ஓட்டி சென்றுள்ளார். பின்னர், போலீசார் துரத்தி பிடித்து, காரை ஓட்டி வந்த, ஓசூர் காளேகுண்டா பகுதியைச் சேர்ந்த யாரப் பாஷா (34) என்பவரை கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். மேலும், காரில் இருந்த 250 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி தங்கதுரை பரிந்துரையில், நேற்று கலெக்டர் தினேஷ்குமார், யாரப் பாஷாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

Related Stories: