×

புழல் ஏரிகரை பகுதியில் நடைபயிற்சி செல்வோருக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா?

புழல், ஏப்.3: புழல் ஏரி கரை பகுதியில் நடைபயிற்சி செல்வோருக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த, ஏரியின் செங்குன்றம் பகுதி மதகிலிருந்து புழல் பகுதியில் உள்ள சென்னை குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் வரை சுமார் 3.5 கிலோ மீட்டர் தூரத்தில் கரை பகுதி உள்ளது. கரைப்பகுதியில் செங்குன்றம், புழல், வடகரை, பாடியநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினசரி காலை, மாலை நேரங்களில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் நடைப்பயிற்சிக்கு சென்று வருகின்றனர்.

மேலும், மாலை நேரங்களில் ஏரியில் வீசும் தென்றல் காற்றை அனுபவிப்பதற்காக பொதுமக்களும் வந்து செல்கின்றனர். ஏரிக்கரையில் நடைப்பயிற்சிக்கு செல்ல உரிய சாலையாக இல்லாமாலும், 2 பக்கங்களிலும் செடிகள் வளர்ந்தும் உள்ளது. மேலும், மின்விளக்குகள் இல்லை. இதனால் நடைப்பயிற்சி செல்லும் மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, ஏரியை ரசிக்க வரும் பொதுமக்களிடம் மற்றும் காதல் ஜோடிகளை ஆகியோரை மிரட்டி செயின் மற்றும் பணத்தையும் மர்ம நபர்கள் பறித்துச் செல்கின்றனர். நகை, பணம் கொடுத்த காதலர்கள், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடியாமல் அங்கிருந்து சென்று விடுகின்றனர்.

இதுகுறித்து, பலமுறை நடைப்பயிற்சி மேற்கொள்ளும் மக்களும், பொதுமக்களும் சம்பந்தப்பட்ட செங்குன்றம் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கரைப்பகுதி சாலைகளை சரி செய்யவும், மின் விளக்குகள் அமைக்கவும் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், புழல் ஏரிக்கரை மற்றும் புழல், செங்குன்றம் ஆகிய காவல் நிலையங்களின் எல்லைப் பகுதிகள் இருப்பதால், யார் ரோந்து பணியில் ஈடுபடுவதென அவர்களுக்குள் பொறுப்பை தட்டிக் கழித்து காவல்துறையினரும் ரோந்து பணியில் ஈடுபடாமல் உள்ளனர் என பொதுமக்களும், நடைப்பயிற்சிக்கு செல்பவர்களும் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, நடைப்பயிற்சி செல்லும் பொதுமக்கள் கூறுகையில்; `புழல் ஏரி கரையில் உள்ள சாலையில் நாங்கள் தொடர்ந்து காலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி சென்று வருகிறோம். பெரும்பாலான முதியோர்கள் மற்றும் காதல் ஜோடியினர் மாலை நேரங்களில் ஏரி ரசிப்பதற்காக இங்கு வந்து செல்கின்றனர். இவர்களுக்கு இருக்கைகள் கிடையாது. பல மணி நேரம் நின்றுக்கொண்டு ஏரியின் அழகை ரசித்து சிரமத்துடன் செல்கின்றனர்.
ஆனால், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள், நடைபயிற்சி செல்லும் எங்களிடம் காலையிலே வந்து வாக்குகளை கேட்கின்றனர்.

அப்போது, நாங்கள் புழல் ஏரியை சுற்றுலாத்தலமாக ஆக்குவோம், நடைப்பயிற்சிக்கு செல்லக்கூடிய சாலையை சரிசெய்து, உரிய வசதிகளை செய்து கொடுப்போம் என கடந்த 15 ஆண்டுகளாக சொல்லி வருகின்றனர். இதுவரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளனர். எனவே, வருகின்ற காலங்களில் மாதவரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெறுபவர் உரிய நடவடிக்கை எடுத்து நடைப்பயிற்சி செல்பவர்களுக்கும், ஏரியை ரசிக்க வரும் முதியோர்களுக்கும் உரிய வசதிகள் செய்து தருவார்களா என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தனர்.

Tags : Puzhal Lake ,Puzhal ,Chennai ,
× RELATED கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே கிடப்பில் போடப்பட்ட சுரங்கப்பாதை பணி