திருவள்ளூர், ஏப்.2: திருவள்ளூரில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்ற திருமண விழாவில் பெண் நிர்வாகியிடம், பூந்தமல்லி தவெக வேட்பாளர் குட்டி (எ) பிரகாசம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அளித்த புகார் பொய்யானது என அவரது மனைவி அளித்த புகாரின்பேரில் பெண் நிர்வாகி உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் தெற்கு மாவட்ட தவெக செயலாளரான குட்டி (எ) பிரகாசம். கடந்த 29ம் தேதி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டபோது, குட்டி (எ) பிரகாசம் பூந்தமல்லி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி திருவள்ளூரில் நடந்த திருமண வரவேற்பு விழாவில் தவெக மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் குட்டி (எ) பிரகாசம், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அப்போது, பாதுகாப்பு கருதி நிர்வாகிகளை கட்டுப்படுத்தியபோது, மகளிர் அணி நிர்வாகி சங்கீதா மணிகண்டனை, தெற்கு மாவட்ட செயலாளர் குட்டி (எ) பிரகாசம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தவெக தலைமைக்கு சங்கீதா மணிகண்டன் புகார் கொடுத்துள்ளார. ஆனால், தவெக தலைமை நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், கடந்த 3 நாட்களுக்கு முன்பு பூந்தமல்லி சட்டமன்ற (தனி) தொகுதி வேட்பாளராக குட்டி (எ) பிரகாசம் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த 29ம் தேதி பூந்தமல்லி சட்டமன்ற (தனி) தொகுதி வேட்பாளர் குட்டி (எ) பிரகாசம் கடந்த ஜூன் 8ம் தேதி திருவள்ளூரில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில், தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சங்கீதா மணிகண்டன் புகார் கொடுத்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வேட்பாளர் குட்டி (எ) பிரகாசம் மனைவி சுகுணா, மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை அளித்தனர். அந்த, புகார் மனுவில் மாவட்ட மகளிர் அணி நிர்வாகியாக பொறுப்பு வாங்கி தரவேண்டும் எனக்கூறி சங்கீதா மணிகண்டன் என்பவர் பிரச்சனை செய்ததாகவும், பொறுப்பு வாங்கி தராததால் தனது கணவர் மீது பொய்யான புகாரை அளித்துள்ளதாகவும், கட்சியில் உள்ள ஒரு சிலரே தனது கணவருக்கு எதிராக செயல்பட்டு அந்த பெண்ணை தூண்டி விட்டுள்ளதாகவும், அதனாலயே அப்பெண் புகார் அளித்த இருப்பதாகவும், பொய்யான புகார் கொடுத்த சங்கீதா மணிகண்டன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு கொடுத்தார்.
அதேபோல் மகளிர் அணியை சேர்ந்த நிர்வாகிகளும் பொய்யான புகார் தெரிவித்த சங்கீதா மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு கொடுத்திருந்தனர். இதனைத்தொடர்ந்து, மாவட்ட போலீஸ் எஸ்பி விவேகானந்த சுக்லா உத்தரவின்பேரில் திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி தமிழரசி, மேற்பார்வையில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமோதரன், சப்-இன்ஸ்பெக்டர் சுகுணா ஆகியோர் வழக்கு பதிவு செய்து சங்கீதா மணிகண்டன், லெனின், பிரவீன், வெற்றிச்செல்வன், மகேஷ், ஜெய, மாதவன் ஆகிய 7 பேரும், ஒன்று கூடி சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டது, பொது இடத்தில் அதிகமாக பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது, வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மிரட்டியது, பெண்களை அசிங்கமாக திட்டியது ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
