×

பெண் நிர்வாகிக்கு பாலியல் சீண்டல் வழக்கில் பூந்தமல்லி தவெக வேட்பாளர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

திருவள்ளூர், ஏப் 1: திருவள்ளூர் தெற்கு மாவட்ட தவெக செயலாளரான குட்டி (எ) பிரகாசம் (45). இந்நிலையில், கடந்த 29ம் தேதி கட்சி தலைவர் விஜய், தவெக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதில் குட்டி (எ) பிரகாசத்தை பூந்தமல்லி (தனி) தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி திருவள்ளூரில் நடைபெற்ற திருமணம் வரவேற்பு விழாவில், தவெக மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்றார். இதில் திருவள்ளூர் அடுத்த திருவூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவியும், தமிழக வெற்றி கழகத்தின் தெற்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகியுமான சங்கீதா (43) என்பவரும் கலந்துகொண்டார்.

அப்போது, அருகில் இருந்த தவெக தெற்கு மாவட்ட செயலாளரும், தற்போதைய பூந்தமல்லி சட்டமன்ற (தனி) தொகுதி தவெக வேட்பாளருமான குட்டி (எ) பிரகாசம் என்பவர், அருகில் நின்றவாறு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது, சங்கீதா மணிகண்டனின் உடலின் மீது 4 முதல் 5 முறை தவறான இடத்தில் கை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும், தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் வா என வற்புறுத்தியும் உள்ளார். இதுகுறித்து சங்கீதா, தனது கணவர் மணிகண்டனிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியான அவர், குட்டி (எ) பிரகாசத்தின் மாவட்ட செயலாளர் அலுவலகத்திற்கு சென்று கேட்டுள்ளார்.

அப்போது அவர், உன் மனைவியின் கையை பிடித்து இழுத்தேனா அல்லது புடவையை அவிழ்த்து பார்த்தேனா போன்ற ஆபாசமான வார்த்தைகளால் பேசியதாகவும், எல்லாவற்றிற்கும் அனுசரித்தால் மட்டுமே கட்சியில் பயணிக்க முடியும் என்றும், நடந்ததை வெளியில் சொன்னால் கொன்றுவிட்டு தடயமே இல்லாமல் செய்து விடுவேன் என்றும் பகிரங்கமாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கீதா மற்றும் அவரது கணவர் மணிகண்டன் ஆகியோர், தவெக தலைமை அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். அப்போது, நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். இதனால் சங்கீதா மணிகண்டன், போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 29ம் தேதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பட்டியலில் பூந்தமல்லி (தனி) சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் குட்டி (எ) பிரகாசம் போட்டியிட போவதாக தவெக தலைவர் விஜய் அறிவித்ததால், சங்கீதா மணிகண்டன் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் கட்சியின் பெண் நிர்வாகியை பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கொடுத்த புகாரின் மீது தமிழக வெற்றி கழக தலைமை நிர்வாகம், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் மனமுடைந்த தவெக மாவட்ட பெண் நிர்வாகி சங்கீத மணிகண்டன், நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் குட்டி (எ) பிரகாசம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தார். அப்போது போலீசார், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் அங்கிருந்து அவர் கிளம்பி சென்றனர்.

இதனைத்தொடர்ந்து அவரது புகாரின் அடிப்படையில், மாவட்ட போலீஸ் எஸ்பி விவேகானந்தர் சுக்லா உத்தரவின்பேரில் டிஎஸ்பி தமிழரசி, திருவள்ளூர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமோதரன் ஆகியோர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சுகுணா மற்றும் போலீசார் பூந்தமல்லி சட்டமன்ற (தனி) தொகுதி தவெக வேட்பாளர் குட்டி (எ) பிரகாசம் மீது பிரிவு 296 B, பிரிவு 74, பிரிவு 75 (2), பிரிவு 79, பிரிவு 351(3), பிரிவு 4 உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். புகார் அளித்த சங்கீதா மணிகண்டனிடம், முதல் கட்டமாக போலீசார் விசாரணை மேற்கொண்ட பிறகு, பூந்தமல்லி தவெக வேட்பாளர் குட்டி (எ) பிரகாசனிடம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவி கொடுக்கவில்லை என்பதால் தான் தனது கணவர் மீது பொய்யான புகாரை சங்கீதா மணிகண்டன் அளித்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் குட்டி (எ) பிரகாசம் மனைவி சுகுணா, நேற்று மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : Poonamalli Thaweka ,Thiruvallur ,Kutty (A) Prakasam ,45 ,Thiruvallur South District ,Thaweka ,Vijay ,Poonamalli ,
× RELATED செங்கல்பட்டு அருகே புதிய மலையேற்ற பாதை: ட்ரெக் தமிழ்நாடு அமைப்பு திட்டம்