ஆர்.கே.பேட்டை, ஏப். 1: ஆர்.கே.பேட்டையில் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று சுகாதார மேற்பார்வையாளர், ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். ஆர்.கே.பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே இருந்த கடைகளில் சுகாதார துறையினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டு புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது சட்டப்படி அபராதம் மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா, பான் மசாலா) விற்பனை தடுக்க கடைகளில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், பல கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, திருவள்ளூர் மாவட்ட சுகாதார அலுவலர் உத்தரவின்படி, ஆர்.கே.பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலைகளில் வாரந்தோறும் புகையிலை தடுப்பு சட்டத்தின் கீழ் புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் அயோடின் கலந்த உப்பு விற்பனை செய்யப்படுகின்றனவா என சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் சலீம் பாஷா, தினேஷ், பொன்னம்பலம், யோகேஷ் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஆர்.கே.பேட்டை பஜாரில் உள்ள கடைகளில் சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என சோதனை செய்தனர். மேலும், ஆர்.கே.பேட்டை அரசு மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே இருந்த கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது, புகையிலை பொருட்கள் விற்பனை செய்து, அரசு விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி அபராதம் விதிக்கப்பட்டு, கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களை எச்சரித்தனர்.
