உ.பி, மணிப்பூரை போல் வன்முறை காடாக மாற்றிவிடுவார்கள் என்டிஏ கூட்டணிக்கு எதிராக தமிழ்நாடே திரள வேண்டும்: திருச்சி கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருச்சி: தமிழகத்தில் என்டிஏ கூட்டணி வந்தால், உ.பி மற்றும் மணிப்பூரை போல் வன்முறை காடாக மாற்றிவிடுவார்கள். இதனால் என்டிஏ கூட்டணிக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடே அணி திரள வேண்டும் என்று திருச்சியில் நடந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளார். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் திருவாரூரில் நேற்று முன்தினம் பிரசாரத்தை துவக்கினார்.

கூட்டம் முடிந்ததும் இரவு காரில் திருச்சி வந்து கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். தொடர்ந்து, நேற்று காலை திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை திடலில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் திருச்சி மேற்கு, கிழக்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், லால்குடி, முசிறி, மணப்பாறை, மண்ணச்சநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அவர் பேசியதாவது: தலைநகர் சென்னைக்கே சவால் விடும் வகையில் திருச்சி இன்றைக்குத் தரம் உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

கொடுத்த வாக்குறுதிகளை நாங்கள் இன்றைக்கு நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம். கொடுக்காத பல வாக்குறுதிகளையும் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். இவை அனைத்திற்கும் மேல், தமிழ்நாட்டில் சாதிக்கலவரம் இல்லை, பாஜ ஆளும் மாநிலங்கள் போன்று மதக்கலவரங்கள் இல்லை. உத்தரபிரதேசம் போன்று கும்பல் வன்முறை இல்லை. மணிப்பூர் போன்று தொடர் வன்முறைகள் இல்லை. இப்படி அனைத்தையும் உருவாக்க வேண்டும் என்று பாஜ செய்த சூழ்ச்சிகளையும் நாம் முறியடித்திருக்கிறோம்.

அமைதியான சூழலும், திறமையான மனித வளமும், நம்முடைய ஆட்சியில் இருக்கும் காரணத்தினால்தான் இன்றைக்கு முதலீடுகளும் தமிழ்நாட்டில் வந்து கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கான தெளிவான செயல்திட்ட அறிக்கையாக திமுக தேர்தல் அறிக்கையை நான் வெளியிட்டிருக்கிறேன். இதில் அறிவிக்கப்பட்ட ரூ.8000 கூப்பன்தான் இன்று தமிழ்நாடு முழுவதும் ஒரே பேச்சாக இருக்கிறது. ஏராளமான வாக்குறுதிகளை நாம் கொடுத்திருக்கிறோம். நாங்கள் சொன்னால் செய்வோம். செய்வதைத்தான் சொல்வோம்.

நான் கலைஞரின் மகன். சொன்ன வாக்குறுதிகளை மறக்கவும் மாட்டேன், மறுக்கவும் மாட்டேன். கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் நிதி நிலையை சீராக்கி, ஒவ்வொன்றாக நாங்கள் நிறைவேற்றி வரும் திட்டங்களே அதற்கு சாட்சி. தன்னுடைய பத்தாண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டை அனைத்து துறையிலும் படுகுழிக்கு தள்ளிய அதிமுகவும், இந்தியாவை வரலாறு காணாத சரிவுக்கு கொண்டு சென்றிருக்கும் பாஜவும் சேர்ந்து அமைத்திருக்கும் கூட்டணிக்கு இந்த தேர்தலிலும் வழக்கம்போல் படுதோல்வியைதான் நீங்கள் பரிசாக தர வேண்டும்.

மக்களுக்கு நேரடியாக எட்டாயிரம் ரூபாய்க்கான கூப்பனை தரப்போகும் நம்முடைய இல்லத்தரசிகள் திட்டத்தை பார்த்து இன்றைக்கு வயிறு எரிந்து, அது ஊழலுக்கான திட்டம் என்று சொல்கிறார் பழனிசாமி. எந்த பழனிசாமி, சம்பந்திக்கு காண்ட்ராக்ட் கொடுப்பதற்காகவே ஆட்சியை நடத்திய பழனிசாமி. திமுக செய்யும் ஒவ்வொரு திட்டமும் தரமானதாக இருக்கும் எடுத்துக்காட்டுக்கு சொல்கிறேன்… தலைவர் கலைஞர், 2006 தேர்தலின்போது, கலர் டி.வி. வழங்குவோம் என்று சொன்னார். ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடனே, ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான, கலர் டி.வி.களை வழங்கினார்.

இன்றைக்கும் பல வீடுகளில் கலர் டி.வி.யாக மட்டுமல்ல, கலைஞர் டி.வி.யாக அது நிலைத்து நிற்கிறது! இதற்கு பெயர்தான் குவாலிட்டி. இதுவே, அதிமுக ஆட்சியில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி என்று கொடுத்தீர்கள். என்ன ஆனது? காயலாங்கடையில் இருக்கிறது. இந்த லட்சணத்தில் வாய் இருக்கிறது என்று என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று பேசிக்கொண்டிருக்கிறார் நம்முடைய பழனிசாமி. ஏற்கனவே, 2021 தேர்தலில், மகளிர் உரிமைத்தொகையாக நாங்கள் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று சொன்னவுடனே, அவசர அவசரமாக அவர் வீட்டில் இருக்கும் ஜெராக்ஸ் மெஷினை ஆன் செய்து, 1,500 ரூபாய் தருவோம் என்று அறிக்கை வெளியிட்டார்.

பழனிசாமியின் வாய்ச்சவடாலும், அவரின் அலங்கோல ஆட்சி நிர்வாகத்தின் ஊழல் பவுசும் தெரிந்து, மக்களான நீங்கள் அவரை புறக்கணித்தீர்கள். இப்போதும் மக்களுக்கு நல்லது நடக்க கூடாது என்று, வயிற்றெரிச்சலில், தன்னை போலவே பிறரையும் நினைத்து ஊழல் நடக்கும் என்று பேசிக்கொண்டிருக்கிறார். அண்மையில், மதுரையில் ஒரு சம்பவம் நடந்தது. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு டிரெய்லர்தான் அது. மதுரையில் நடைபெற்ற கூட்டத்தின் நுழைவு வாயிலில் தந்தை பெரியார் படத்தை வைக்க கூடாது என்று பாஜ சொன்னதும், சுயமரியாதையே இல்லாமல் அதை எடுக்க துணிந்தவர்தான் பழனிசாமி.

மதுரை பாஜ ஆதரவு கூட்டத்தில், தந்தை பெரியாரையும், அண்ணாவையும் கொச்சைப்படுத்தும் காணொளியை வெளியிட்டார்கள். அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மூன்று பேர் கொஞ்சம் கூட சொரணையே இல்லாமல் அதை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் கேட்கிறேன்… மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இருந்தால் விட்டிருப்பாரா? அல்லது அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இருந்தால் விட்டிருப்பாரா? பேரறிஞர் அண்ணாவை இவ்வாறு அசிங்கப்படுத்தினால் பார்த்துக்கொண்டு சும்மா இருந்திருப்பார்களா? பழனிசாமியின் ஒரே சாதனை அதிமுக எனும் கட்சியை அடிமை கூட்டமாக சீரழித்து இருப்பதுதான்.

‘திராவிடம்’ என்ற சொல்லும் அந்த கூட்டத்தில் அவமானப்படுத்தப்பட்டது. அதிமுக முன்னணியினர் அதையும் கூட தடுக்கவில்லை. “திராவிடம் என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது, நான் புராணங்களை எல்லாம் படித்தது இல்லை” என்று கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் சிரித்துக்கொண்டே சொன்னவர்தான் பழனிசாமி. இந்த துப்புகெட்ட பழனிசாமி, யார் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, தன்னுடைய பதவியை காப்பாற்றி கொண்டால் போதும் என்று பாஜவின் பாதம் தாங்கியாக இருந்து கொண்டிருப்பவர்தான் பழனிசாமி.

தன் மீதான ஊழல் புகார்கள், உறவினர்கள் வீடுகளில் நடந்த ரெய்டுகளில் இருந்து தப்பிக்க மொத்த கட்சியையும் பாஜவிடம் பழனிசாமி அடகு வைத்துவிட்டார். மக்கள் வாக்களிக்காமலேயே எம்எல்ஏக்களை ஏலத்தில் எடுத்து ஒரு முறை முதலமைச்சர் ஆகிவிட்டார். கூவத்தூர் வரலாறு எல்லாம் உங்களுக்கு தெரியும். மீண்டும் இவரிடம் ஆட்சி சென்றால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் டெல்லியிடம் அடகு வைத்துவிடுவார். அடகு என்ன, மொத்தமாக விற்றுவிடுவார். இவரின் ஓனரான பாஜவின் ஒரே நோக்கம் தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுப்பதுதான்.

நேராக வந்தால் தமிழ்நாட்டு மக்கள் நோட்டாவிற்கு கீழே அனுப்பிவிடுவார்கள், அதனால்தான் கொத்தடிமை கூட்டமாக இருக்கும் அதிமுக முகமூடியுடன் வருகிறார்கள். இந்தியாவிலேயே அதிகளவில் பெண்கள் வேலைக்கு செல்லும் மாநிலம், நம்முடைய தமிழ்நாடுதான், பாஜ ஆளும் மாநிலங்களில் நடப்பது மாதிரியான அட்டூழியங்கள் இங்கு கிடையாது. பெண்களை பாதுகாப்பாக வாழ வைப்போம் என்று பிரதமர் சொல்ல வேண்டியது, தமிழ்நாட்டில் இல்லை, பாஜ ஆளும் மாநிலங்களில் சென்றுதான் இதையெல்லாம் பேச வேண்டும்.

அதைவிட்டுவிட்டு, என்டிஏ கூட்டணியினர் தமிழ்நாட்டை பற்றி அவதூறாக பேசுவது, தமிழ்நாட்டை நாசப்படுத்தவும், தமிழ்நாட்டு வளர்ச்சியை கெடுக்க வேண்டும் என்றுதான். தமிழ்நாட்டின் முன்னேற்றமும் வளர்ச்சியும் தொடர வேண்டும் என்றால், ஏழாவது முறையும் நம்முடைய திமுக ஆட்சி அமைய வேண்டும், திராவிட மாடல் தொடர வேண்டும். பாஜவும் அதன் கொத்தடிமை கூட்டமும் ஆட்சிக்கு வந்தால் அதன் தீமைகள் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு இருக்கும் தமிழ்நாடு தமிழ்நாடாகதான் இருக்க வேண்டும்.

உத்தரபிரதேசம் போன்று, மணிப்பூர் போன்று வன்முறை காடாக ஆகக்கூடாது, இவர்கள் வந்தால் தமிழ்நாட்டின் பெயரையே தட்சிண பிரதேஷ் என்று மாற்றவும் தயங்க மாட்டார்கள். இதை தடுக்க வேண்டும் என்றால் ஒட்டு மொத்த தமிழ்நாடும் பாஜ – அதிமுக கூட்டணிக்கு எதிராக, ஓரணியில் இணைய வேண்டும். நம்முடைய எதிரிகளையும் பாஜவின் உதிரிகளையும் வீழ்த்த வேண்டும். நன்றாக புரிந்து கொள்ளுங்கள், நாம் போராடுவது, திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல, நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக.

பாஜவின் டப்பா எஞ்சின் முன்னால், நம்முடைய திராவிட மாடலின் சூப்பர் பாஸ்ட் எஞ்சின் ஒருபோதும் தலைகுனியாது. நம்முடைய ஸ்பீடு என்ன என்று காண்பித்து விடலாமா? வெல்லப்போவது தமிழ்நாடு அணியா?… டெல்லி அணியா?… ஒரு கை பார்த்துவிடலாமா?… நடக்க இருக்கும் இந்த ஜனநாயக போரில், அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, நம்முடைய தாய் தமிழ்நாட்டை காக்க, அனைவரும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும், கலைஞரின் மகனாக உங்களிடம் கேட்கிறேன் உங்கள் பொன்னான வாக்குகளை உதயசூரியனுக்கு வழங்குங்கள்… வழங்குங்கள் என்று கேட்டு, விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம். இவ்வாறு அவர் பேசினார்.

* காந்திமார்க்கெட்டில் நடந்து சென்று ஓட்டு கேட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருச்சியில் நேற்று காலை 6.45 மணிக்கு ஓட்டலிலிருந்து காரில் புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் போட்டியிடும் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காந்திமார்க்கெட்டுக்கு காரில் சென்றார். பின்னர் திமுக வேட்பாளர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், இனிகோ இருதயராஜ் ஆகியோருடன் நடந்து சென்று வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர்கள் உற்சாகமாக கைகொடுத்து முதல்வரை வரவேற்றனர்.

இதில் சிலர் போட்டி போட்டுக்கொண்டு முதல்வரிடம் செல்பி எடுத்துக்கொண்டனர். பின்னர் அங்குள்ள ஒரு டீக்கடையில் அமர்ந்து டீக்குடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பாலக்கரை சாலையில் சிறிது தூரம் நடந்து சென்று சாலையின் இருபுறமும் வியாபாரிகள், தொழிலாளர்களிடம் தீவிர வாக்கு சேகரித்தார். பின்னர் முதல்வர், பாலக்கரையில் இருந்து காரில் ஏறி தங்கியிருந்த ஓட்டலுக்கு புறப்பட்டார்.

வழியில் பீமநகர் பகுதியில் காரை விட்டு இறங்கிய முதல்வர், மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேருவுக்கு ஆதரவு திரட்டினார். பின்னர் 7.45 மணிக்கு முதல்வர் ஓட்டலுக்கு வந்தார். அப்போது ஓட்டலில் முதல்வரை சந்திக்க தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு உள்ளிட்ட நிர்வாகிகள், விவசாயிகள், முஸ்லிம், கிறிஸ்தவ அமைப்பினர் முதல்வருக்காக ஓட்டல் முன் காத்திருந்தனர். பின்னர் ஓட்டலுக்குள் அனுமதிக்கப்பட்ட அவர்களை முதல்வர் சந்தித்து பேசினார்.

* காலை உணவு வாகனத்தை ஆய்வு
முதல்வர் மு.க.ஸ்டாலின் பாலக்கரையில் நடந்து வந்த போது அங்கு ஒரு பள்ளிக்கு முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ், உணவு சமைத்து லோடு வேனில் கொண்டு செல்லப்பட்டது. அந்த வாகனத்தை முதல்வர் நிறுத்தி டிரைவரிடம் எந்த பள்ளிக்கு உணவு கொண்டு செல்லப்படுகிறது என விசாரித்ததுடன், லோடு வேனில் இருந்த உணவையும் பார்வையிட்டார்.

* மாணவிக்கு அட்வைஸ்
திருச்சி பாலக்கரை பகுதியில் நடந்த சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினை பள்ளி மாணவி ஒருவர், குடும்பத்துடன் வரவேற்றார். பின்னர் அந்த மாணவியுடன் முதல்வர் போட்டோ எடுத்துக்கொண்டார். அப்போது மாணவியை அருகில் அழைத்த முதல்வர், என்ன படிக்கிறாய் என கேட்டு தெரிந்து கொண்டு, நன்றாக படிக்கும்படி அறிவுரை கூறினார்.

* மக்கள் நிம்மதியாக இருப்பதால் அதிமுக, பாஜ டென்ஷன்
கரூர் ராயனூர் திடலில் நேற்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் தொகுதி வேட்பாளர் ராஜா, குளித்தலை தொகுதி வேட்பாளர் சூரியனூர் சந்திரன், கரூர் தொகுதி தியாகராஜன்ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்த திராவிட மாடல் ஆட்சியில், சாதிக் கலவரம் இல்லை மதக் கலவரம் இல்லை கும்பல் வன்முறை இல்லை தொடர் வன்முறைகள் இல்லை தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது.

மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் இதைப் பார்த்து அதிமுகவும், பாஜவும்தான் டென்ஷனாக இருக்கிறார்கள். ஏன் என்றால், இந்த அமைதியை கெடுக்க அவர்கள் பரப்பும் பொய் செய்திகள் அனைத்தும் புஸ்வாணமாக ஆகிவிட்டது. அவர்களின் சதித்திட்டங்கள் அனைத்தும் சந்தி சிரித்துவிட்டது, அவர்களின் அவதூறு பிரச்சாரங்கள் அனைத்தும் தவிடுபொடியாகிவிட்டது. அனைத்திற்கும் காரணம் இந்த தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல, இந்த ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருக்கும் நீங்கள்தான் அதற்கு காரணம்.

ஒன்றிய பாஜக ஆட்சி எம்.பி. தேர்தலில் ஒரு சீட் கூட வெற்றிபெற வைக்கவில்லையே என்ற விரக்தியில் இன்றைக்கு வரைக்கும் தமிழ்நாட்டை பழிவாங்கி கொண்டிருப்பதுதான் பாஜக ஆட்சி. இப்படிப்பட்ட தமிழ்நாட்டிற்கு விரோதமான கூட்டணிக்கு, தக்கப்பாடம் புகட்டுவதற்கான நாள்தான், ஏப்ரல் 23. அன்றைக்கு, பழனிசாமியின் ‘அமித்ஷா அதிமுக’வை மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ் இயக்கும் பாஜவையும் சேர்த்து விரட்டியடிக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.

தேர்தல் ரிசல்ட்டை இப்போதே தெரிந்துகொண்ட காரணத்தினால்தான் அதிகமாகப் புலம்ப ஆரம்பித்துவிட்டார் பழனிசாமி.  என்டிஏவில் இணைந்திருக்கும் அத்தனை ஊழல் கட்சிகளின் குடுமிப்பிடியும் அமித்ஷாவிடம்தான் இருக்கிறது. அ.தி.மு.க.வை மொத்த அழிவுப்பாதையில் அழைத்துச் செல்லும் பழனிசாமி, நம்மைப் பார்த்து, இதுதான் நமக்கு கடைசி தேர்தல் என்று சொல்லியிருக்கிறார். வழக்கமாக அமாவாசையை பார்த்து ஆருடம் சொல்லும் பழனிசாமி, இந்த முறையும் தவறான ஆருடத்தையே சொல்லியிருக்கிறார்.

அதிமுகவில் இருந்து விலகியவர்கள், இன்றைக்கு தாய்க்கழகமான திமுகவிற்கு வருவதைப் பார்த்து வயிறெரிந்து இப்படி பேசியிருக்கிறார். இதெல்லாம், பாஜவின் பாதமே சரணாகதி என்று இருக்கும் பழனிசாமிக்கு புரியாது. தடம் மாறி கூட்டணி வைத்திருக்கும் பழனிசாமி, செய்த துரோகங்களை சிறிது எண்ணி பாருங்கள். டிசைன் டிசைனாக செய்ய வேண்டும் என்று நினைக்கும் பழனிசாமி அவர்கள், ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய துரோகம் செய்ய அமைத்திருப்பதுதான், டப்பா எஞ்சின் என்டிஏ கூட்டணி! துரோகத்திற்குத் துரோகமே துணை என்பது போன்று அமைத்திருப்பதுதான், என்டிஏ கூட்டணி. இவ்வாறு அவர் பேசினார்.

* டூர் மோடிலேயே வரும் பிரதமரே… தலைசிறந்த தமிழ்நாட்டை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்…
‘‘கடந்த 11 ஆண்டு காலத்தில் பாஜ, தமிழ்நாட்டிற்கான எதையும் செய்யவில்லை. நம்முடைய மக்களின் எந்த கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை. 12 ஆண்டுகளாக ஆட்சி செய்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டிற்காக இதுவரை ஒரு சிறப்பு திட்டம் கூட இல்லை. எய்ம்ஸ் வரவில்லை. மதுரை, கோவை, திருச்சி மெட்ரோ ரயில் வரவில்லை. கல்வி நிதி வரவில்லை. இவ்வளவு அநீதிகளையும் செய்துவிட்டு, தேர்தல் வந்துவிட்டது என்று, தமிழ்நாட்டிற்குக் கிளம்பி வருகிறார்,

மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள். கடந்த மாதம்கூட இதே திருச்சிக்கு பிரதமர் மோடி அவர்கள் வந்தார். நான் கேட்கிறேன்… அப்படி வந்தவர், “இதெல்லாம் ஒன்றிய பாஜ அரசின் மூலமான தமிழ்நாட்டிற்கு செய்த திட்டங்கள் என்று சொன்னாரா? எங்களால் தமிழ்நாட்டிற்கு இதெல்லாம் கிடைத்திருக்கிறது” என்று பட்டியல் போட்டு சொன்னாரா? இருந்தால்தானே சொல்ல முடியும், சட்டியில் இருந்தால்தானே, அகப்பையில் வரும்.

எப்போதும் டூர் மோடிலேயே இருக்கும் பிரதமருக்கு திராவிட மாடல் அரசு செய்த திட்டங்களை கேட்டு தெரிந்து கொள்ள நேரம் இருந்திருக்காது, அப்படி இல்லை என்றால், தமிழ்நாட்டை பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்காது. அவரிடம் நான் கேட்டுக்கொள்வதெல்லாம், மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே… தமிழ்நாட்டிற்கு வாருங்கள்… ஒருவார காலம் இங்கேயே தங்கியிருந்து, எங்கள் தமிழ்நாடு எப்படி தலைசிறந்த தமிழ்நாடாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

* நாம் போராடுவது, திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல, நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக.

* அதிமுக-பாஜ கூட்டணி வந்தால் தமிழ்நாட்டின் பெயரையே தட்சிண பிரதேஷ் என்று மாற்றவும் தயங்க மாட்டார்கள்.

* தமிழ்நாட்டை பற்றி அவதூறாக பேசுவது, தமிழ்நாட்டை நாசப்படுத்தி தமிழ்நாட்டு வளர்ச்சியை கெடுக்க வேண்டும் என்று என்டிஏ கூட்டணியினரின் திட்டம்.

Related Stories: