மத்திய ஆசியா போர் காரணமாக உள்நாட்டு விமானங்கள் கட்டணம் கிடுகிடு உயர்வு; பயணிகள் அதிர்ச்சி: சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.6,503; மதுரைக்கு ரூ.5,467

சென்னை: மத்திய ஆசியா போர் காரணமாக சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமானங்களின் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். போர் பதற்றம் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளின் விலையும், இரு மடங்குகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. இந்நிலையில் விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணங்களை உயர்த்துவதற்கு விதித்திருந்த தடையை ஒன்றிய அரசு தளர்த்தி உள்ளதால் உள்நாட்டு விமானங்களின் கட்டணம் அதிகரித்துள்ளது.

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளிடையே போர் தொடங்குவதற்கு முன்னதாக இருந்த கட்டணங்களை விட, தற்போது(ஏப்ரல் 1ம்தேதி முதல்) விமான டிக்கெட் கட்டணங்கள் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஜனவரி மாதத்தில் சென்னை – தூத்துக்குடி இடையே குறைந்தபட்ச விமான கட்டணம் ரூ.3,608 இருந்த நிலையில், தற்போது குறைந்தபட்ச கட்டணம் ரூ.6,503ஆக உள்ளது. சென்னை – மதுரை விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,129 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.5,467ஆகவும், சென்னை – திருச்சி குறைந்தபட்ட கட்டணம் ரூ.3,608ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.4,521ஆக உயர்ந்துள்ளது.

சென்னை – கோவை குறைந்தபட்ச கட்டணம் ரூ.4,351. தற்போது, ரூ.4,966ஆக உள்ளது. சென்னை – டெல்லி குறைந்தபட்ச கட்டணம் ரூ.5,933ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.6,496ஆக உள்ளது. சென்னை – மும்பை குறைந்தபட்ச கட்டணம் ரூ.3,356ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.4,020ஆக அதிகரித்துள்ளது. சென்னை – கொல்கத்தா குறைந்தபட்ச கட்டணம் ரூ.5,293ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.6,047ஆக உள்ளது. சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமானங்களின் கட்டணம் நேற்று முதல், கிடுகிடுவென உயர்ந்துள்ளன.

ஆனால் இந்தக் கட்டண உயர்வுகள், தமிழ்நாட்டுக்குள் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில், மிகவும் அதிகமாகவும், சென்னையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் விமானங்களுக்கு, கட்டண உயர்வு ஓரளவு குறைவாகவும் உள்ளன. இதுகுறித்து விமான நிறுவனங்கள் தரப்பில் கூறுகையில், ‘தமிழ்நாட்டிற்குள் சில விமானங்கள், போதிய பயணிகள் இல்லாமல் குறைந்த பயணிகளுடன் இயக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க விமான டிக்கெட் கட்டணங்கள் ஓரளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் விமானங்களில், பயணிகள் கூட்டம் அதிகளவில் உள்ளதால், விமான நிறுவனங்களுக்கு அதிக இழப்புகள் ஏற்படாததால், கட்டண உயர்வு பெருமளவு அதிகரிக்கவில்லை’ என்றனர். இந்த கட்டண உயர்வுகள் அனைத்தும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதால், ஏற்கனவே, பழைய கட்டணத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பயணிகள், போர்டிங் பாஸ்கள் வாங்குவதற்கு முன்னதாக, கூடுதல் கட்டணத் தொகைகளை, ஆன்லைன் மூலமாக செலுத்த, பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திடீர் கட்டண உயர்வு காரணமாக விமான பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: