தாமரையில நிற்கலைங்க… தயவுசெஞ்சு ஓட்டு போடுங்க…! இஸ்லாமியர்களிடம் கெஞ்சிய அதிமுக வேட்பாளர்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியில் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரின் மனைவி கீர்த்திகா போட்டியிடுகிறார். இந்த முறை எப்படியும் திருவாடானையில் சீட் வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த கீர்த்திகா, கடந்த வருடமே தனக்கு ஆதரவான ஒன்றிய செயலாளர்களை இப்பகுதிகளில் நியமித்து தயார் நிலையில் இருந்தார். தேர்தலில் சீட் வாங்கிய நிலையில், நேற்று தொண்டி பகுதியில் இஸ்லாமிய பிரமுகர்களை சந்தித்தார். அப்போது, ‘‘நான் தாமரை சின்னத்தில் நிற்கவில்லை.

இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்கிறேன். அதனால் இஸ்லாமியர் ஓட்டுகளை பெற்றுத்தர வேண்டும்’’ என்று கீர்த்திகா தெரிவித்தார். அப்போது அங்கிருந்த இஸ்லாமியர்கள், ‘‘கடந்த முறை இந்த பகுதியை சேர்ந்த ஆனிமுத்துவுக்கே ஓட்டு போடவில்லை. பாஜ உடன் கூட்டணியில் யார் வந்தாலும் இஸ்லாமியர் ஓட்டு கிடையாது’’ என்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த கீர்த்திகா மற்றும் அதிமுக நிர்வாகிகள், இஸ்லாமியர்கள் கூறிய பதில் காதில் விழாதது போல, ‘‘வணக்கம்… ஓட்டு போட்டுருங்க…ஓட்டு போட்டுருங்க…’’ என்று கூறியவாறு நைசாக நழுவி சென்றனர்.

Related Stories: