நச்னு நாலு கேள்வி: பிரசாரத்துக்கு வெளியூர்காரங்களை கூட்டிட்டு வராரு நயினாரு! சாத்தூர் திமுக வேட்பாளர் கடற்கரைராஜ்

1. சாத்தூர் தொகுதியில் பாஜவுக்கு வாக்கு வங்கி இருப்பதால் நயினார் மாறி வந்துள்ளதாக கூறப்படுகிறதே? தொகுதி நிலவரம் எப்படி இருக்கு? சாத்தூரில் பாஜவுக்கு வாக்கு வங்கி இருப்பதாக சொல்வது முற்றிலும் தவறு. இந்த தொகுதியில் அவர்களது கூட்டணிக்குள் புகைச்சல் உள்ளது. குறிப்பாக, அதிமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். அது கண்டிப்பாக தேர்தலில் எதிரொலிக்கும். திமுக தலைவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள நல்ல திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றுள்ளது. அதுவே எனக்கு வெற்றியை தேடி தரும்.

2. பாஜ மாநில தலைவரே இங்கு போட்டியிடுகிறார். அவருக்காக ஒட்டுமொத்த கட்சியும் வேலை செய்யும். அவரை எதிர்த்து நீங்கள் நிற்கிறீர்கள். தேர்தல் முடிவு எப்படி இருக்கும்? நயினார் நாகேந்திரன் பாஜ மாநில தலைவராக உள்ளார். உண்மைதான். ஆனால் அவருக்கு வேலை செய்ய பெரியளவில் உள்ளூர் ஆட்கள் இல்லை. முகம் தெரியாத வெளியூர் ஆட்களைத்தான் அழைத்து வருகின்றனர். தொகுதியை பற்றி முழுமையாக தெரியாத இவர்கள் எப்படி வேலை செய்ய முடியும்? தேர்தல் முடிவு எனக்கும், திமுக கூட்டணிக்கும் சாதகமாக இருக்கும். எங்களது கூட்டணி பலம் வாய்ந்த கொள்கை கூட்டணி. கூட்டணி கட்சியினர் தொகுதியில் ஒற்றுமையுடன் உழைக்கிறார்கள்.

3. தொகுதியில் பிரசாரம் செய்து வருகிறீர்கள். திமுக அரசின் திட்டங்களுக்கு மக்களின் ஆதரவு எப்படி இருக்கிறது? தொகுதி முழுவதும் மக்கள் எழுச்சியாக உள்ளனர். மகளிர் உரிமைத்தொகை, மகளிர் விடியல் பயணம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு மக்களிடம் அமோக ஆதரவு உள்ளது. குறிப்பாக கூலி தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த சாத்தூர் தொகுதியில் மகளிர் விடியல் பயணம் திட்டத்தால் பெண்கள் அதிகம் பயனடைந்து வருகின்றனர். மகளிர் உரிமைத்தொகை பெறும் குடும்ப பெண்களின் ஆதரவு ஒட்டுமொத்தமாக திமுக பக்கம்தான் உள்ளது.

4. பெரிய பின்புலம் இல்லாத உங்களை வேட்பாளராக முதல்வர் தேர்வு செய்ததை எப்படி பார்க்கிறீர்கள்? கட்சிக்கு விசுவாசமாக இருப்பது, மாவட்ட பஞ்சாயத்து சேர்மனாக எந்தவித குற்றச்சாட்டுக்கும் உட்படாமல் பணியாற்றியது ஆகியவைதான் என்னை வேட்பாளராக தேர்வு செய்ததற்கு முக்கிய காரணமாக பார்க்கிறேன். எனது மனைவி சாத்தூர் ஒன்றிய ஊராட்சி சேர்மனாக இரண்டு முறை இருந்து பணியாற்றியுள்ளார். நான் கடந்த ஐந்தாண்டுகளாக திமுக சாத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளராக பணியாற்றியுள்ளேன். எங்களது பணியை அறிந்து முதல்வர் என்னை சாத்தூர் தொகுதி வேட்பாளராக தேர்வு செய்துள்ளார்.

Related Stories: