திருவாடானை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டாறுகளின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலங்கள்

* தொடரும் தமிழக அரசு சாதனை

*  50 ஆண்டு போக்குவரத்து துயரம் நீக்கம்

திருவாடானை : மணிமுத்தாறு, பாம்பாறு மற்றும் விரிச்சுழி ஆறு ஆகிய காட்டாறுகள் சிவகங்கை மாவட்டத்தில் பெய்யும் மழைநீரைச் சுமந்து கொண்டு, பல கிராமங்களைக் கடந்து கிழக்கு நோக்கிச் சென்று கடலில் கலக்கின்றன.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, மழை காலங்களில் இந்த காட்டாறுகளில் ஏற்படும் கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக, தரைப் பாலங்களுக்கு மேல் சுமார் ஐந்து முதல் 7 அடி வரை தண்ணீர் செல்வது வழக்கமாக இருந்தது.

இதனால் மாணிக்கம்கோட்டை, கடம்பூர், விசும்பூர், ஊரணிக்கோட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெளி உலகத் தொடர்பை இழந்து தனித்தீவுகளாக மாறும் அவலநிலை நீடித்து வந்தது.

குறிப்பாக, திருவாடானையின் வடபகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வெள்ளம் வடியும் வரை கல்வி நிலையங்களுக்குச் செல்ல முடியாமலும், பொதுமக்கள் மருத்துவ அவசர தேவைகளுக்காக திருவாடானை அல்லது தேவகோட்டைக்குச் செல்ல முடியாமலும் பெரும் இன்னல்களைச் சந்தித்து வந்தனர்.

மக்களின் இந்த நீண்டகாலப் போராட்டத்தை உணர்ந்த தமிழக அரசு, கடந்த ஐந்து ஆண்டுகளில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு பாலப் பணிகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, மாணிக்கம்கோட்டை அருகே சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரமாண்டமான உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு, தற்போது போக்குவரத்து பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் அப்பகுதி மக்களின் 50 ஆண்டுகாலக் கனவு நனவாகியுள்ளது.

இதேபோல், சூட்சனி கிராமத்திற்கும் தோட்டமங்கலத்திற்கும் இடைப்பட்ட சாலையில் இருந்த தரைப் பாலம் அகற்றப்பட்டு, சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.

முன்னதாக வெள்ளக் காலங்களில் ஆபத்தான முறையில் கயிறுகளைக் கட்டி ஆற்றைக் கடந்து வந்த சூட்சனி, திருவடி மிதியூர் கருப்பூர், சிறுவண்டல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இப்போது பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்கின்றனர்.

மேலும், நகரிகாத்தான் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய மேம்பாலத்தால் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடைந்துள்ள நிலையில், ராமேஸ்வரம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஆனந்தூர் செல்லும் பாதையில் ஏற்பட்ட போக்குவரத்துத் தடையைச் சரி செய்ய 5 கோடி ரூபாய் செலவில் நவீன மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆனந்தூர்,ஆயங்குடி, பணிக்கோட்டை, ராதா ஊர், சிவனூர், பொன்னியந்தல், கூடலூர், நத்தக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களுக்கு தடையற்ற போக்குவரத்து வசதி கிடைத்துள்ளது.இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மாணிக்கம்கோட்டை கிராம மக்கள், ”முன்பு காவல் நிலையம், நீதிமன்றம் மற்றும் தாலுகா அலுவலகம் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு வெறும் 20 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய இடத்திற்கு, வெள்ளத்தினால் 50 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய அவலநிலை இருந்தது.

எங்கள் குழந்தைகளின் கல்வியும், முதியவர்களின் மருத்துவமும் கேள்விக்குறியாக இருந்த நிலையில், இந்த அரசு எங்களது அரைநூற்றாண்டு கால கோரிக்கையை நிறைவேற்றித் தந்துள்ளது\” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

திருவாடானை தொகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் காட்டாறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இத்தகைய ஏராளமான மேம்பாலங்கள், அப்பகுதி கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் புதிய பாதையை அமைத்துக் கொடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: