சென்னை விமானநிலையத்தில் 35 லட்சம் ரூபாய் பறிமுதல்: 2 பயணிகளிடம் விசாரணை

 

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலைய உள்நாட்டு முனையத்தில் இன்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்திறங்கியது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறையின் ஏர்இன்டலிஜென்ஸ் பிரிவின் சிறப்பு குழுவினர் ரகசிய கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். அப்போது மதுரையை சேர்ந்த 2 பயணிகள், கன்வேயர் பெல்ட்டில் வந்த தங்களின் சூட்கேஸ் மற்றும் பைகளை எடுத்து கொண்டு வெளியே செல்ல முயன்றனர். அப்போது அந்த 2 பயணிகளை சுங்கத்துறையின் ஏர்இன்டலிஜென்ஸ் அதிகாரிகள் சந்தேக நிலையில் நிறுத்தி விசாரித்தனர். அதற்கு அப்பயணிகள் அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி கேட்டனர். எனினும் சுங்கத்துறை அதிகாரிகள், எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் யாரை வேண்டுமானாலும் எந்த இடத்திலும் சோதனை நடத்தும் அதிகாரம் உள்ளது என்று தெரிவித்து, அந்த 2 பயணிகளின் உடைமைகளை திறந்து சோதனை செய்தனர்.

அதற்குள் கட்டுக்கட்டாக ரூ.1.50 லட்சம் இந்திய பணம் மற்றும் ரூ.33.5 லட்சம் மதிப்பில் அமெரிக்க டாலர் கரன்சி நோட்டுகள் என மொத்தம் ரூ.35 லட்சம் மதிப்பில் ரொக்கப் பணம் எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. அதோடு, இப்பணம் அனைத்தும் கணக்கு மற்றும் ஆவணங்கள் இல்லாத பணம் என்று தெரியவந்தது. இதையடுத்து அப்பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் சுங்கத்துறை சட்ட விதிகள் மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஆகியவற்றின்கீழ், மதுரையை சேர்ந்த 2 பயணிகள்மீது வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் 2 பயணிகளையும் சென்னை விமான நிலையத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட 2 பயணிகளிடமும் வருமானவரி துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

Related Stories: