புழுதிவாக்கம் பறக்கும் ரயில் நிலையத்தில் லிப்டில் சிக்கி தவித்த 4 குழந்தைகள் உள்ளிட்ட 17 பேர் பத்திரமாக மீட்பு: அதிகாரிகளுக்கு கண்ணீர்மல்க நன்றி

 

ஆலந்தூர்: புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் லிப்டில் சிக்கி தவித்த 4 குழந்தைகள் உள்பட 17 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். அவர்களுக்கு கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர். சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் தனது மனைவி உள்பட குடும்பத்தினருடன் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு சென்றுள்ளார். சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் பறக்கும் ரயிலில் ஏறி இரவு 9.30 மணி அளவில் புழுதிவாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் 2வது தளத்தில் இருந்து கீழே செல்ல லிப்டில் ஏறியபோது சங்கர் குடும்பத்துடன் சேர்ந்து குழந்தைகள் உட்பட 17 பேர் லிப்டில் ஏறியுள்ளனர். லிப்ட் சென்றுக்கொண்டிருந்தபோது அதிகபாரம் காரணமாக முதல் தளத்தின் பாதி வழியிலேயே நின்றுவிட்டது. இதனால் அதில் இருந்த குழந்தைகள் உள்பட 17 பேரும் பதற்றம் அடைந்து கூச்சல் போட்டுள்ளனர். லிப்ட்டில் உள்ள அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது யாரும் போனை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து சங்கர் செல்போன் மூலம் நண்பரை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். அவரது நண்பர் உடனடியாக புழுதிவாக்கம் திமுக கவுன்சிலர் ஜே.கே.மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அவர் மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீசாரும் வேளச்சேரி தீயணைப்பு வீரர்களுடன் கவுன்சிலர் மணிகண்டன் புழுதிவாக்கம் ரயில் நிலையத்துக்கு விரைந்து வந்துள்ளார். பின்னர் தீயணைப்பு படையினர் 2வது தளத்தில் பாதியில் நின்றிருந்த லிப்டின் நுழைவாயிலை திறந்து அதன் வாயிலாக மின் தூக்கி மேற்பகுதிக்கு சென்று அதில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியை அகற்றி அதன் வாயிலாக முதலில் 4 குழந்தைகளை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டுவந்தனர். இதன்பின்னர் அடுத்தடுத்து 13 பேரையும் மீட்டு பத்திரமாக வெளியே கொண்டுவந்தனர். உடல் வியர்த்து பதற்றமாக இருந்த அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து தண்ணீர், உணவு வழங்கப்பட்டது. லிப்டில் சிக்கி மீட்ட அதிகாரி பிரபாகரன் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினருக்கு கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர்.

 

Related Stories: