சென்னை: திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவரும், திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி எம்பி நேற்று அளித்த பேட்டி: திமுகவின் தேர்தல் அறிக்கை, பல்வேறு இடங்களில் மக்களை சந்தித்து கேட்டுப் பெறப்பட்ட 80 ஆயிரம் கருத்துக்கள், மனுக்களை கொண்டு தமிழகத்தின் வளர்ச்சியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. நிறைவேற்ற முடியுமா? முடியாதா? என்பதை சிந்திக்காமல் தேர்தல் வாக்குறுதிகளை எழுதக்கூடாது.
எந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கு சாத்தியம் இருக்கிறதோ, அதை மட்டுமே வாக்குறுதியாக வழங்க வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருந்தார். அதன்படி எந்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியுமோ, அதை வைத்து மட்டுமே இந்த தேர்தல் அறிக்கையை உருவாக்கியிருக்கிறோம். இதில் உள்ள இல்லத்தரசி கூப்பன் திட்டத்தை பொறுத்தவரை, ஒரு பொருளாக வழங்கும்போது அது அவர்களுக்கு தேவைப்படாமல் இருக்கலாம். அதனால் மக்களுக்கு சாய்ஸ் (விருப்பத்துக்கு ஏற்ப) வழங்கவேண்டும் என்ற வகையில் இதை அறிவித்திருக்கிறோம்.
வருமான வரி செலுத்தாத குடும்பங்களில் இருக்கக்கூடிய பெண்கள் கூப்பன்களுடன் அருகில் இருக்கக்கூடிய கடைகளுக்கு சென்று, மிக்ஸி, டிவி போன்ற பொருட்களை மேம்படுத்தவோ, அல்லது புதிதாக வாங்குவதற்கோ அதனை பயன்படுத்தி கொள்ளலாம். திமுகவும், அதிமுகவும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. இதில் உண்மையை பேசக்கூடிய தேர்தல் அறிக்கை எதுவோ, யாருக்கு வெற்றிவாய்ப்பு இருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொண்டு இருக்கிறார்களோ, அந்த தேர்தல் அறிக்கைக்கு தான் மரியாதையும் செல்வாக்கும் இருக்கும். இவ்வாறு கூறினார்.
