சிறுபான்மையினருக்கு மட்டும் 90,000 ஓட்டு; திருச்சி கிழக்கை விஜய் டிக் அடித்த காரணம் இதுதானா? வீட்டை விட்டே வெளியே வராதவருக்கு எங்க வாக்கை ஏன் வேஸ்ட் பண்ணனும் மக்கள் கேள்வி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியலை அதன் தலைவர் விஜய் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று அறிவித்தார். அதில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். திருச்சி கிழக்கை விஜய் தேர்ந்தெடுத்தது ஏன் என்பது பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. திருச்சி என்றாலே எப்போதும் அரசியல் கட்சிகளுக்கு திருப்புமுனையாக திகழும். அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என அனைவரும் அரசியல் மாநாடுகளை திருச்சியில் நடத்தியுள்ளனர்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் திருச்சியில் போட்டியிடவில்லை என்றாலும் இங்கு தான் அதிகளவிலான பொதுக்கூட்டங்களை நடத்தி தேர்தலில் வெற்றிபெற தேவையான யுக்திகளை கையாண்டார். அதேபோல முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2011ம் ஆண்டு ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று முதல்வரானார். இவர்கள் பாணியில் தற்போது தவெக தலைவர் விஜய்யும் திருச்சியை குறிவைத்துள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு கட்சி தொடங்கியதை தொடர்ந்து முதல் முறையாக திருச்சியில் கடந்தாண்டு செப்.12ம்தேதி பிரசாரத்தை தொடங்கினார். கிழக்கு தொகுதிக்குட்பட்ட மரக்கடையில் அந்த பிரசாரம் நடந்தது. தொண்டர்கள் பல மணி நேரம் காத்திருந்த நிலையில் பிரசார வாகனத்தில் மைக் வேலை செய்யாததால் விஜய் பேச்சு தொண்டர்களுக்கு புரியாததால் ஏமாற்றமடைந்தனர். தொண்டர்களை மணிக்கணக்கில் காக்க வைத்தார். முதல்முறை திருச்சியில் தொடங்கிய பிரசாரம் கடைசியில் சொதப்பலானது.

திருச்சி கிழக்கு தொகுதியில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் கணிசமாக உள்ளனர். இவர்களை குறி வைத்து தான் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் களமிறங்கி உள்ளார். திருச்சி கிழக்கு தொகுதி முழுவதுமாக நகர்புறத்தை கொண்டு அமைந்தது. திமுக சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ், அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை வீழ்த்தி தன் பலத்தை நிரூபித்தார். இனிகோ இருதயராஜ் எம்எல்ஏவாக பொறுப்பேற்றது முதல் மக்கள் பணியை சற்றும் மறவாமல் முழுநேரமும் செய்தார்.

இதனால் அவர் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். 2026 தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் ராஜசேகரனும், நாதக சார்பில் கிருஷ்ணசாமியும் போட்டியிட உள்ளனர். திருச்சி கிழக்கு தொகுதி இறுதி வாக்காளர் பட்டியல் படி 2 லட்சம் வாக்காளர் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பெண்கள். அதோடு அங்கு கிறிஸ்தவர்கள் வாக்கு 70,000த்திற்கும் மேல் உள்ளது. இஸ்லாமியர்கள் வாக்கு 20,000த்திற்கும் மேல் உள்ளது. 33 சதவீதத்திற்கும் அதிகம் உள்ள இளம்வாக்காளர்கள் ஆதரவு விஜய்க்கு சாதகமாக இருக்க கூடும்.

இந்த கணக்கை வைத்து விஜய் திருச்சியில் போட்டியிட முடிவெடுத்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் கூறுகையில், ‘‘சினிமாவில் அவரை ரசித்தாலும், மக்களுக்காக அரசியலில் அவர் எந்தளவிற்கு களமாடுவார் என தெரியவில்லை. அதோடு சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். பெரம்பூர் அவர் வாழும் நகரின் ஒரு பகுதி.

இங்கு போட்டியிட்டு அவரால் வெற்றி பெற முடியாது. அப்படியே திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றாலும் ராஜினாமா செய்துவிட்டு அவர் சென்னையில் தான் இருப்பார். பிரசாரத்துக்கு எப்போதாவது வருபவர் தொகுதி மக்களை எப்படி சந்திப்பார். மக்களே அவரை சந்திக்க சென்றாலும் முடியாது. அங்கு இருக்கும் கட்சி நிர்வாகிகளே அவரை சந்திக்க முடியவில்லை. சமீபத்தில் கூட ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. பெரம்பூர் தொகுதியில் வாக்காளர் ஒருவர் பேசுகையில், இங்கு விஜய் ஜெயித்தால், அவரை எங்கே போய் நாங்கள் சந்திப்பது என கேள்வி எழுப்புகிறார்.

அதற்கு பேட்டி எடுப்பவர், அப்போ விஜய் மக்களுடன் தொடர்பில் இல்லை என்று சொல்கிறீர்களா? என கேட்கிறார். அதற்கு அவர், விஜய் யாருடன் தொடர்பில் இருக்கிறார் என்று எனக்கு தெரியாது என சொல்கிறார். இப்படிதான் விஜய்யின் நிலை இருக்கிறது. அதனால் எதற்கு தேவையில்லாமல் அவருக்கு ஓட்டை போட்டு வேஸ்ட் பண்ண வேண்டும். அவருக்கு இங்கு ரசிகர்கள் அதிகம் இருந்தாலும் அது வாக்காக மாறுமா என்பது சந்தேகமே.

திருச்சி கிழக்கு தொகுதியின் வரலாறு, மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதெல்லாம் விஜய்க்கு தெரியுமா என தெரியவில்லை. விஜய்யின் கணிப்பு திருச்சியில் பலிக்காது. திருச்சி மக்கள் வாக்குகளை சிதற விட மாட்டார்கள். பெரம்பூர் கைவிட்டாலும், திருச்சி காப்பாற்றும் என்று விஜய் நினைக்கிறார். ஆனால் அது ஈடோறாது என்பதே கள நிலவரமாக உள்ளது. செயல்பாடுகளையும், மக்கள் அன்பையும் பெற்றவர் என்ற வகையில் இப்போதைய எம்எல்ஏ இனிகோ இருதயராஜூக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது’’ என்றனர்.

* ஏப்ரல் 2ம்தேதி வேட்பு மனுதாக்கல்?
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்த விஜய், ஏப்.2ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு மீண்டும் இந்த பக்கம் எட்டிபார்ப்பாரா விஜய்? என கிழக்கு தொகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். பதிலுக்கு விடைதெரியாமல் தவெக தொண்டர்கள் செல்வதறியாது திணறி வருகின்றனர்.

* விஜய் தைரியம் இல்லாதவர் முடிஞ்சா இங்க மட்டும் போட்டியிட சொல்லுங்க… திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ்
திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் அளித்த பேட்டி: 2021ம் ஆண்டு என்னை யார் என்று தெரியாதபோது கிழக்கு தொகுதி மக்கள் எனக்கு ஆதரவாக வாக்களித்து 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்தனர். ஐந்தாண்டுகள் எம்எல்ஏவாக அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளேன். களப்பணியாற்றியுள்ளேன். அந்த தைரியத்தோடு சொல்கிறேன், ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வென்று காட்டுவேன். மீண்டும் களப்பணியாற்றி வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வேன்.

தவெக தலைவர் விஜய் தைரியம் இல்லாதவர். தெம்பும் திராணியும் இருந்தால் அவர் பெரம்பூர் தொகுதியை விட்டுவிட்டு திருச்சி கிழக்கு தொகுதியில் மட்டும் போட்டியிடட்டும். அறிவாலயத்தை, தேவாலயம் ஒருபோதும் கைவிடாது. கிறிஸ்தவன் என்கிற காரணத்திற்காக விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவாரேயானால், கிழக்கு தொகுதி கிறிஸ்தவ மக்களையும் தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ மக்களையும் ஏமாற்ற முடியாது. தைரியமின்றி 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். கிறிஸ்தவ மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்.

நாட்டில் இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிராக பாசிசம் செய்வோரை எதிர்த்து ஆதரவாக விஜய் குரல் கொடுத்ததில்லை. 2025ம் ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவின்போது வட மாநிலங்களில் தேவாலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. அதனை கண்டித்து ஒரு அறிக்கை கூட விஜய் ெவளியிடவில்லை. பாஜவின் மற்றொரு அணியாக விஜய் செயல்பட்டு வருகிறார் என்பது நிதர்சனமான உண்மை. இவ்வாறு அவர் கூறினார்.

* அரசியல் களத்தில் விஜய் நிற்பாரா? அதிமுக வேட்பாளர்
திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் அளித்த பேட்டியில், ‘திரைப்படத்தில் நடித்துவிட்டு செல்வது போன்றதல்ல அரசியல். அரசியலில் வெற்றி பெற வேண்டுமானால் களப்பணியாற்ற வேண்டும். அது விஜய்யால் முடியுமா? நான் சவால் விடுகிறேன்.

அடுத்து வரும் 30 நாட்கள் தொகுதியில் நின்று விஜய்யால் களப்பணியாற்ற முடியுமா? அவர் களப்பணியாற்றி காட்டட்டும். இங்கு திமுகவிற்கும், அதிமுகவிற்கும் மட்டுமே போட்டி. விஜய் எல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. தேர்தலில் தோல்வியடைந்த பின்பு அவர் அரசியல் களத்திலேயே இருக்க மாட்டார். இங்கு வெற்றி பெற வாய்ப்பில்லை என்பது அவருக்கும் தெரியும் என்பதாலேயே பெரம்பூரிலும் போட்டியிடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: