31 தொகுதியில் நின்னே 33,000 ஓட்டுதான் கிடைச்சுது; இதுல 5 சீட் தருவாங்களா? கிருஷ்ணசாமியை பங்கம் செய்த எடப்பாடி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தென்மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். அங்கு எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுக, பாஜ கூட்டணியில் எந்த அதிருப்தியும் இல்லை. எங்கள் கூட்டணியை பொறுத்தவரை, கூட்டணி தலைவர்களை அழைத்து பேசினோம். அன்றைய தினமே கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் அறிவிக்கப்பட்டன. மறுநாள் தேர்தல் அறிக்கை வெளியிட்டோம். அதற்கு அடுத்தநாள் முதல் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

அதன்பிறகு 2வது வேட்பாளர் பட்டியலும், தற்போது 3வது வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டு விட்டது. எனவே, அதிமுகவை பொறுத்தவரை எங்களது கூட்டணியில் கடுகளவு பிரச்னைகூட இல்லை. புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எங்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தையே நடத்தவில்லை. வேறொருவர் மூலம் 10 சீட் கேட்டார். பின்னர் 5 சீட் கேட்டார். எங்களால் இயலாது என்று கூறி விட்டோம்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது, எங்களுடன் அவர் கூட்டணியில் இல்லை. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு கூட்டணியிலும் கட்சிகள் சேரும், அந்தந்த கட்சியின் வாக்கு வங்கிக்கு ஏற்றவாறுதான், அந்த கட்சிக்கு இடம் ஒதுக்கப்படும். கடந்த சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி 31 தொகுதிகளில் போட்டியிட்டு 33 ஆயிரம் ஓட்டு வாங்கி உள்ளது. ஆனால் அவர் அதிகமான சீட் கேட்டு ஆள் அனுப்பினார். நாங்கள் இயலாது என்று கூறிவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

* ‘விஜய் சொல்லிட்டு போகட்டும்’
‘விஜய் வேட்பாளர் அறிவிக்கும்போது திமுக, தவெக இடையே இருமுனை போட்டிதான் என்று கூறி இருக்கிறார். அவர் சொன்னால் சொல்லிவிட்டு போகிறார். புதிதாகத்தானே வந்து இருக்கிறார். தேர்தல் முடிந்தால்தான் அவரது விவரம் தெரியும்’ என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

* ‘கொரோனா டைம்ல சரக்கு கடைல துட்டே வரல’எடப்பாடி பேச்சால் பெண்கள் அதிர்ச்சி
குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஆரல்வாய்மொழி சந்திப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தில் அவர் பேசுகையில், ‘‘அதிமுக ஆட்சியில் ஒரு வருடம் வருவாயே இல்லாமல், கொரோனா காலத்தில் 40,000 கோடி ரூபாய் செலவு செய்து சிறப்பான ஆட்சி வழங்கப்பட்டது. டாஸ்மாக் உள்ளிட்ட எந்த வருமானமும் எங்களுக்கு இல்லை. ஆனாலும் சிறப்பான நிர்வாகத்தை நடத்தினோம்’’ என்றார். கொரோனா காலத்தில் டாஸ்மாக் வருமானம் இல்லை என பேசியது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories: