மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்து கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஆய்வு நடத்திய கலெக்டர்

கோவில்பட்டி : தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம்தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்த இயந்திரங்கள் அனைத்தும் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு கோவில்பட்டி தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள அறையில் தாசில்தார் அப்பனசாமி தலைமையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ரேண்டம் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான இளம்பகவத், கோவில்பட்டி சப்கலெக்டர் ஹிமான்ஷூ மங்கள், தாசில்தார் அப்பனசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று (28ம்தேதி) அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறும் மையமான பாண்டவர்மங்கலம் நாடார் மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்தும் கலெக்டர் இளம்பகவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related Stories: