ஊட்டி : சட்டமன்ற தேர்தலையொட்டி ஊட்டியில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தை கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்ேதர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி கடந்த 15ம் தேதியில் இருந்து நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
அரசியல் கட்சிகள் பொதுமக்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் தருவதை தடுக்கும் பொருட்டும், அவற்றை பறிமுதல் செய்யவும் மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்கவும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் (தனி) ஆகிய 3 தொகுதிகளுக்கும் பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, பண பரிமாற்ற கண்காணிப்பு, தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட இந்த வாகனங்களின் செயல்பாடுகள் ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த கட்டுப்பாட்டு மையத்தில் சி-விஜில் செயலி மூலம் பெறப்படும் புகார்கள் பதிவு, சமூக ஊடகம், ஊடக கண்காணிப்பு ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகளை நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கிருந்த பணியாளர்களிடம் விழிப்புடன் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக பெறப்படும் புகார்களை முறையாக பதிவு செய்வதுடன், அது குறித்து பறக்கும் படைகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
