*தொழிலாளர்கள் ஓட்டம்
ஊட்டி : ஊட்டி அருகே டி.மைனலை கிராம தேயிலை தோட்டத்தில் ஒரே இடத்தில் 4 புலிகள் தென்பட்டதால் தேயிலை பறித்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். நீலகிரி வனப்பரப்பு மிகுந்த மாவட்டமாக விளங்கி வருகிறது.
இந்த வனங்களில் புலி, சிறுத்தை, காட்டுமாடு, யானை, கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. சமீப ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கிராமப்புறங்களில் வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சில நேரங்களில் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இதுவரை உலா வராத யானை, புலிகள் சமீப நாட்களாக நடமாடி வருகின்றன. இதனால் மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். இதனிடையே ஊட்டி அருகே டி.மைனலை கிராமத்தில் தேயிலை தோட்டத்தில் 4 புலிகள் ஒரே நேரத்தில் சுற்றி திரிந்ததை வடமாநில தொழிலாளர்கள் பார்த்துள்ளனர். அவை சிறுத்தையாக இருக்குமோ என அவர்கள் நினைத்து தங்களது செல்போன் மூலம் வீடியோ எடுத்தனர்.
அந்த காட்சியை ஜூம் செய்து பார்த்தபோது அது புலிகள் என தெரிந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். தோட்டத்தில் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து சென்ற அந்த புலிகள் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டன. அவற்றை விரட்ட தொழிலாளர்கள் சத்தமிட்டனர்.
அதன்பின்னர் தொழிலாளர்களை பார்த்தவாறே மெதுவாக வனப்பகுதிக்குள் அந்த புலிகள் சென்றன. தொழிலாளர்கள் எடுத்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலானது. 4 புலிகள் ஒரே இடத்தில் சுற்றித்திரிந்த சம்பவம் கிராம மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால் தேயிலை பறிக்கச் செல்லும் தொழிலாளர்கள் பணிகளுக்குச் செல்ல அச்சமடைந்துள்ளனர்.
இது குறித்து வனச்சரகர் ராம்பிரகாஷ் கூறுகையில், ‘‘ஊட்டி வடக்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட டி மைனலை பகுதியில் புலிகள் சுற்றித்திரிந்த வீடியோ வந்தது. தாய் புலியுடன் ஒரே குடும்பமாக அந்த புலிகள் சுற்றித்திரிகிறது. வனப்பகுதியை ஒட்டிய தேயிலை தோட்டத்திற்குள்தான் புலிகள் உள்ளன. அவை ஊருக்குள் வர வாய்ப்பு இல்லை. அந்தப் பகுதியில் வனப்பணியாளர்கள் மூலம் கூடுதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம்’’ என்றார்.
