*மாநகராட்சி நடவடிக்கை
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகரப் பகுதிகளுக்கு வல்லநாடு நீரேற்று நிலையத்திலிருந்து பிரதான குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு, ராஜாஜி பூங்காவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தேக்கி வைக்கப்படுகிறது.
அங்கிருந்து மாநகரின் பல்வேறு பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று தூத்துக்குடி ராஜாஜி பூங்கா நுழைவு வாயில் அருகே இருந்த பிரதான குடிநீர் குழாயின் வால்வு எதிர்பாராதவிதமாகத் திடீரென உடைந்தது. இதனால் மேல்நிலைத் தொட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட குடிநீர், மிகுந்த அழுத்தத்துடன் பீறிட்டு வெளியேறியது.
வால்வு உடைந்ததால் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகச் சாலையில் வெளியேறியது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் குடிநீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக, தூத்துக்குடி கிழக்கு பகுதிக்குட்பட்ட சுமார் 10க்கும் மேற்பட்ட வார்டுகளுக்குச் செல்லும் குடிநீர் விநியோகம் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். உடனடியாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து வரும் நீர் விநியோகத்தை முழுமையாக நிறுத்தினர். குழாயில் தேங்கியிருந்த தண்ணீர் முழுவதும் வெளியேறிய பிறகு, உடைந்த பழைய வால்வை அகற்றிவிட்டு, புதிய வால்வு பொருத்தும் பணி நடந்தது.
இந்தச் சீரமைப்புப் பணிகளால் மாநகரின் முக்கியப் பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக குடிநீர் விநியோகம் முழுமையாகப் பாதிக்கப்பட்டது. கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணானது அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வால்வு சரிசெய்யப்பட்டு குடிநீர் விநியோகம் சீராகத் தொடங்கியுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
