பெங்களூரு: இந்த ஆண்டின் ஐபிஎல் தொடருக்கான முதல் போட்டி பெங்களூரில் நடைபெறவுள்ள நிலையில் தொடக்க விழா நடைபெறாது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 19வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் 28ம் தேதி தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்சிபி- சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோதுகின்றன. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில், கேப்டன்கள் சந்திப்பு நிகழ்ச்சி மும்பையில் நேற்று நடந்தது. ஐபிஎல் வரலாற்றில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் ஐபிஎல் அணிகளின் அனைத்து கேப்டன்களும் இந்திய வீரர்களாக நேற்று போட்டோ சூட்டில் கலந்துகொண்டனர்.
சன் ரைசர்ஸ் ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் காயம் காரணமாக ஒரு சில போட்டிகளை தவற விடுவதால் இஷான்கிஷன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்றுபோட்டோ சூட்டில் கலந்துகொண்டார். இதற்கு முன் 2019ம் ஆண்டில் 8 கேப்டன்கள் இந்தியர்களாக இருந்தனர். நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ரூ.16,706 கோடிக்கு ஆதித்யா பிர்லா குழுமம் தலைமையிலான கூட்டமைப்பு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்சிபியின் புதிய இணை உரிமையாளராக அனன்யா பிர்லா அறிவிக்கப்பட்டுள்ளார். அணி கைமாறிய நிலையில் ஆர்சிபியின் பெயர் மாற்றப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால் இதனை அனன்யா பிர்லா மறுத்துள்ளார்.
அணியின் பெயர் மாற்றப்படாது என உறுதியளித்துள்ளார். இந்நிலையில், இந்த ஆண்டின் ஐபிஎல் தொடருக்கான முதல் போட்டி பெங்களூரில் நடைபெறவுள்ள நிலையில் தொடக்க விழா நடைபெறாது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெங்களூரில் கூட்ட நெரிசலால் உயிரிழந்தவர்களின் நினைவாக தொடக்க விழா இன்றி இந்த ஆண்டு ஐபிஎல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இறுதி போட்டியும் (மே.31) பெங்களூரில் நடைபெறவுள்ளதால் அன்று பிரம்மாண்டமான நிறைவு விழாவை ஐபிஎல் நிர்வாகம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, 2026 ஐபிஎல் தொடருக்கான இரண்டாம் கட்ட அட்டவணை வெளியானது.
