சென்னை: நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட கோரி திமுக சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. 2024ல் மக்களவை தேர்தலின்போது தாம்பரத்தில் நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. நெல்லை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளரான நயினாரின் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது. நயினார் நாகேந்திரன் அவரது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிடக்கோரி திமுக மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில்; இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் மீது சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் இது தொடர்பாக மூல வழக்கு பதிவு செய்தும் இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்யவில்லை.
இந்த விவகாரத்தில் ஆரம்பகட்ட விசாரணை நடத்துவது கட்டாயமானது என்பதால் வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரனும், கேசவ விநாயகமும் பாஜகவை சேர்ந்தவர்களாக இருப்பதால் இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
