சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு வரும் 28ம்தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளாத வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெ.குமரகுருபரன் அறிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. . தேர்தல் தொடர்பாக, 16 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்திற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் அலுவலராக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர், ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஒரு கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் 13,65,763 ஆண் வாக்காளர்கள், 14,64,344 பெண் வாக்காளர்கள் மற்றும் 829 இதர பாலினத்தவர்கள் என மொத்தம் 28,30,936 வாக்காளர்களாக உள்ளனர். 4,079 வாக்குச்சாவடிகளும் மற்றும் 6 துணை வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 4,085 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 978 இடங்களில் இவ்வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளது.
16 சட்டமன்றத் தொகுதிகளுக்கு, காவல் துறை பணியாளர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் ஆகியோரைக் கொண்ட 375 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய மற்றும் மாநில அரசின் அமலாக்கத்துறை போன்ற பல்வேறு துறைகளில் தேர்தல் விதிமுறைகளை கண்காணிப்பதற்காக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 13,634 எண்ணிக்கையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 6,349 கட்டுப்பாட்டு கருவிகளும் சரிபார்க்கப்பட்டு இருப்பில் உள்ளது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் என்ற வீதம், 48 பறக்கும் படைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் என்ற வீதம், 48 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 2 வீடியோ கண்காணிப்புக் குழு என்ற வீதம், 32 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தலா ஒரு குழு வீதம் 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 16 வீடியோ பார்வையிடும் குழுக்கள், 16 உதவி செலவினப் பார்வையாளர் குழுக்கள், 16 உதவி கணக்கு தணிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத் தேர்தல் அலுவலக ரிப்பன் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 7012 என்ற தொலைபேசி நிறுவப்பட்டுள்ளது. பொது மக்கள் இத்தொலைபேசியின் வாயிலாக தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு வரும் 28ம்தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.குமரகுருபரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.குமரகுருபரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடத்தப்படவுள்ளது. 16 சட்டமன்றத் தொகுதிகளில் 978 இடங்களில் 4,079 வாக்குச்சாவடிகள் உள்ளன.
இந்த வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள 19,594 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பானது வரும் 28ம்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் 16 மையங்களில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புக்கான ஆணைகள் நேரடியாகவும், குறுஞ்செய்தி வாயிலாகவும் உரிய அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. வரும் 28ம் தேதி நடைபெறும் முதற்கட்ட பயிற்சி வகுப்பில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகளின்படி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
