மார்க்காபுரம்: ஆந்திர மாநிலம் மார்க்காபுரத்தில் தனியார் பேருந்து தீப்பிடித்து 10 பேர் உயிரிழந்தனர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ஆந்திரா நோக்கி நேற்று இரவு 40 பயணிகளுடன் ஒரு பேருந்து புறப்பட்டது. இந்த பேருந்து ஆந்திராவில் உள்ள மார்க்காபுரம் அருகே சென்ற போது எதிர் திசையில் கல்குவாரியில் இருந்து வந்த டிப்பர் லாரி பேருந்து மீது மோதியதில் பேருந்தில் இருந்த டீசல் டேங்கரில் தீ பற்றியது. சில நொடிகளிலேயே பேருந்து முழுவதும் தீ பரவிய நிலையில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என ஆஞ்சப்படுகிறது. தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க ஆந்திர முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
