வெயிலின் தாக்கம் அதிகரிப்பு கிராமங்களில் நார் உலர வைக்கும் பணி தீவிரம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், கிராமங்களில் உள்ள களங்களில் நார் உலர வைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

பெரும்பாலான இடங்களில் ஆட்கள் பற்றாக்குறையால் டிராக்டர் இயந்திரம் கொண்டு உலர வைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயமே அதிகளவில் உள்ளது.

சுற்றுவட்டார கிராம பகுதிகளில் 350க்கும் மேற்பட்ட நார் தொழிற்சாலைகளில் நார் உலர வைக்கும் பணி நடக்கிறது. மழை காலங்களில் நார் உலர வைக்கும் பணி மந்தமாக இருக்கும், பின் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் போது நார் உலர வைத்து அதன் உற்பத்தியை அதிகமாக்குகின்றனர்.

இதில் கடந்த ஆண்டில் ஜூலை முதல் தொடர்ந்து சில மாதங்களாக தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை அடுத்தடுத்து பொழிந்தது. இதனால் அச்சமயத்தில் நார் உலர வைக்க முடியாமல் உற்பத்தியாளர்கள் தவித்தனர்.

மேலும் கடந்த ஜனவரி மாதம் துவக்கம் வரை பனிப்பொழிவு மற்றும் அவ்வப்போது சாரல் மழைப்பொழிவு இருந்ததால் நார் உலர வைக்கும் பணி மந்தமாக இருந்தது. வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் நாரின் அளவு குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதமாக பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் மழைபொழிவு இல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. காலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசினாலும், பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்திருப்பதால் களங்களில் நார் உலரவைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

இதில் பெரும்பாலன களங்களில், நார் உலர வைக்கும் பணியில் வெளி மாவட்ட மற்றும் வெளிமாநில தொழிலாளர்களே ஈடுபடுகின்றனர். இருப்பினும் அந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை போதியளவு இல்லாமல் இருப்பதால், தொழிற்சாலைகளில் மட்டையிலிருந்து அதிகபடியான நார்களை பிரித்தெடுத்து அதனை டிராக்டரில் தனி இயந்திரம் பொறுத்தி விரைந்து உலர வைக்கம் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து நார் உற்பத்தியாளர்கள் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை அடுத்தடுத்து பெய்ததால், அந்நேரத்தில் நார் உலர வைக்கும் பணி சற்று குறைவானது. மேலும் ஈரப்பதத்தால் நார் உலர வைப்பதில் தடைபட்டது.

ஆனால் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக சுற்றுவட்டார பகுதிகளில் மழைப்பொழிவு இன்றி வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் களங்களில் நார் உலர வைக்கும் பணியில் தீவிரமாக உள்ளோம்.

தற்போது தொழிலாளர்கள் பற்றாக்குறை என்பது உள்ளதால், தொழிற்சாலையில் அதிகளவு நார் உற்பத்தி செய்யப்பட்டு, அதனை விரைந்து உலர வைத்து எடுப்பதற்காக, டிராக்டரில் நவீன இயந்திரம் பொறுத்தி அதன் மூலம் உலர வைக்கும் பணி தொடர்ந்து வருகிறது. இதனால் உற்பத்தி அதிகரித்து வெளியிடங்களுக்கு அதிக அளவு அனுப்ப ஏதுவாக இருக்கும்’’ என தெரிவித்தனர்.

Related Stories: