கோடை பயிராக இறவை பட்டமாக வெயிலை தாங்கி வளரக்கூடிய எள் விதைப்பு

*விவசாயிகள் மும்முரம்

தா.பழூர் : அரியலூர் மாவட்ட தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி நடவு செய்யப்பட்டு இருந்த நிலையில் அறுவடை பணி முடிவடைந்தது. தாமதமாக அறுவடை செய்யப்பட்ட நெல் வயல்களில் எந்த சாகுபடியும் செய்ய முடியாத நிலை ஏற்ப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக நிலத்தில் ஈரத்தன்மை இருந்த காரணத்தால் எள் விதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறைந்த வயதில் அதிக நீா்த் தேவையின்றி, குறைந்த சாகுபடி செலவில் அதிக லாபம் ஈட்டக்கூடிய பயிா் எள் ஆகும். ஒரு பயிர் சாகுபடி செய்த நிலத்தில் மகசூல் எடுத்த பிறகு, மீண்டும் அதே பயிரை சாகுபடி செய்தால் நிலத்தினுடைய வளம் மற்றும் மகசூல் குறைய வாய்ப்புள்ளது. ஒரு பயிர் சாகுபடி செய்த பின் அடுத்ததாக, மாற்றுப் பயிர்களை விளைவித்தால், முந்தையப் பயிர்களின் கழிவுகள் எருவாகப்பயன்படும்.

அதோடு, முந்தையப் பயிர்களின் நோய்களும் எளிதில் தாக்காது. ஆமணக்கு, நிலக்கடலை, சூரியகாந்தி என ஏகப்பட்ட எண்ணெய் வித்துப் பயிர்கள் இருந்தாலும், அதிகப் பராமரிப்பு இல்லாமல் குறைந்த செலவிலேயே நல்ல வருவாய் தருவது எள் சாகுபடிதான்.

எள் எண்ணெய் வித்துக்களில் முக்கிய ஒன்றாகும். எள்ளானது எண்ணெய் வித்துப் பயிர்களின் அரசி என்றழைக்கப்படுகிறது. எள் சாகுபடி செய்வதற்கு பிப்ரவரி, மாா்ச் மாத இறவை பட்டம் ஏற்றதாகும்.இது தொடர் பயிருக்கும், கலப்பு பயிருக்கும் மற்றும் தனிப்பயிருக்கும் ஏற்றதாகும்.

எள்ளானது நிலத்தடியில் எஞ்சியுள்ள ஈரத்தன்மையை பயன்படுத்தி வறட்சியினைத் தாங்கி வளரக் கூடிய தன்மை உடையதாகும். நாம் அன்றாடம் உணவுகளில் பயன்படுத்தும் நல்லெண்ணெய் எள்ளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. எள் மிட்டாய் தயாரிக்கவும் பயன்படுத்தபடுகிறது. தமிழில் ஒரு பழமொழி உண்டு இளைத்தவனுக்கு எள் என்று, சந்தையில் எப்பொழுதும் அதிக விலை கிடைக்கும் பொருட்களில் எள்ளும் ஒன்று. பொன்னாற்று பாசனம் மூலம் தண்ணீர் பெற்று சாகுபடி செய்த நிலையில் நீர் வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

தற்போது தண்ணீர் இல்லாத நிலையில் நிலத்தில் உள்ள ஈரத்தை பயன்படுத்தி எள்சாகுபடி செய்து வருகின்றனர்.மேலும் இரவு நேரங்களில் அதிக பனி பொழிவு உள்ள காரணத்தினால் பனி துளிகள் ஈரத்தை வைத்து எள் முளைத்து வளர்ந்து விடும். ஆகையால் வயலை புழுதி உழவு செய்து எள் விதைப்பு செய்து வருகின்றனர். இதனால் தண்ணீர் இன்றி, ஆள்செலவு இன்றி லாபத்தை எடுக்க கூடிய பயிரான எள் பயிரை விவசாயிகள் விதைப்பு செய்து வருகின்றனர்.

Related Stories: