அவிநாசி: அவிநாசி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட பச்சாபாளையம் கிராம பகுதியில் ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகத்திடம் புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி கிராம மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இன்று காலை திரண்டு வந்து அவிநாசி- பெரியாயிபாளையம் செல்லும் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இத்தகவல் அறிந்த அவிநாசி போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது 3 நாட்களில் சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
