மாவட்டத்தில் சிலிண்டர் தட்டுப்பாட்டால் விலை ஏறிய போதிலும் விறகு விற்பனை அதிகரிப்பு

ஊட்டி : சிலிண்டர் தட்டுப்பாட்டால் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான ஓட்டல்கள் மற்றும் குடியிருப்புக்களில் விறகு அடுப்புகள் பயன்படுத்தப்படும் விறகுகளின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்தியாவிற்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்கள் அதிகளவு ஈரான் நாட்டில் இருந்தே வந்துகொண்டிருக்கிறது.

இதுவரை ஈரான் தட்டுப்பாடின்றி எரிபொருட்களை இந்தியாவிற்கு வழங்கி வந்தது. இந்த நிலையில், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் நாட்டின் மீது போர் தொடுத்து வருகின்றன. இதனால், ஈரான் நாட்டில் இருந்து எரிபொருட்கள் வருவதற்கு தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக இந்தியாவில் எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பெரும்பாலான சிறிய ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான பெரிய ஓட்டல்கள் மாற்று நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

நீலகிரி மாவட்டத்திலும் இந்த பிரச்னையில் பெரும்பாலான சிறிய ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான ஓட்டல்கள் தற்போது சிலிண்டர்களுக்கு பதிலாக மின்சார அடுப்புகள் மற்றும் விறகு அடுப்புகளை பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக, சிறிய ஓட்டல்கள் தற்போது விறகு அடுப்புகளுக்கு மாறியுள்ளன. இதனால், விறகுகளுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.

ஊட்டியில் உள்ள பெரும்பாலான விறகு விற்பனை செய்யும் கடைகளில் தற்போது விறகு அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் விறகுகள் வந்த சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்து விடுகின்றன.

இதனால், ஒரு சில விறகு கடை உரிமையாளர்கள், ரெகுலர் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றனர். மேலும், விலையும் உயர்ந்துள்ளது. சாதாரணமாக கடந்த மாதம் வரை கிலோ ஒன்று ரூ.10 முதல் 12 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தற்போது விறகிற்கு கிராக்கி அதிகரித்துள்ளதால், கிலோ ஒன்று ரூ.16 வரை விற்பனை செய்யப்படுகிறது. எனினும், ஓட்டல் உரிமையாளர்கள் இதனை வாங்கியே தற்போது சமையல் செய்கின்றனர். அதேபோல், பெரும்பாலான வீடுகளிலும் பொதுமக்கள் விறகு அடுப்புகளுக்கு மாறியுள்ளனர்.

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் 40 நாட்களுக்கு ஒரு முறையே வழங்கப்படும் என்ற நிலை உள்ளதால், அதனை அவசர சமையலுக்கு மிச்சப்படுத்தி பயன்படுத்தி வரும் நிலையில், விறகு அடுப்புகளுக்கு மாறியுள்ளனர். இவர்களும், நாள் தோறும் விறகு கடைகளை முற்றுகையிட்டு விறகுகளை வாங்கிச் செல்கின்றனர்.

Related Stories: