கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

*மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிரசாந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இப்பேரணியில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி மற்றும் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட சிறப்பு பெட்ரோல் ஸ்கூட்டர் மூலமாக தேர்தலில் 100 சதவீதம் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலும், மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தலில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனர்.

இப்பேரணி கள்ளக்குறிச்சி பழைய மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிறைவடைந்தது.

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தவறாமல் வாக்களித்து 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்தார்.

இப்பேரணியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அந்தோணிராஜ் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: