உன் குடும்பம் துன்பங்களை சந்திக்கட்டும் நன்கொடை மறுத்த பெண்ணை சாபமிட்டு பணம் பறித்த போலி சாமியார்கள்

திருமலை : வீடுபுகுந்து தனியாக இருந்த பெண்ணுக்கு சாபமிட்டு பணம் பறித்த போலி சாமியார்களை போலீசார் தேடி வருகின்றனர்.ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் உய்யுரு மண்டலம் அக்குனூர் கிராமத்தை சேர்ந்தவர் மண்டாடா பிரசாத ராவ் (55). இவரது மனைவி மணியம்மா (50). இவர் நேற்றுமுன்தினம் வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது காரில் 4 பேர் கும்பல் காவி உடையுடன் வந்தது. அவர்கள் தங்களை சாமியார் எனக்கூறி மணியம்மாவின் வீட்டுக்குள் நுழைந்தனர். அங்கு மணியம்மாவிடம், `உனது கணவரை எங்களுக்கு நன்றாக தெரியும். எங்கள் ஆசிரமத்தில் அதிக எண்ணிக்கையில் பசுக்கள் வளர்க்கிறோம். அவற்றை பராமரிப்பதற்காக ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கவேண்டும்’ எனக்கூறியுள்ளனர்.

அதற்கு மணியம்மா தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக்கூறினார். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல், ‘நீ பணம் கொடுக்கவில்லை என்றால், உன் குடும்பத்தை சபிப்போம். உன் குடும்பம் துன்பங்களை சந்திக்கட்டும்’ என சாபமிட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மணியம்மா, தன்னிடம் இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார். இருப்பினும் அந்த கும்பல் தொடர்ந்து சாபமிட்டது. இதனால் மேலும் ரூ.1000 கொடுத்துள்ளார்.

அப்போது மணியம்மாவின் உறவினர்கள் அங்கு வந்தனர். அவர்கள் மணியம்மாவிடம் விசாரிப்பதற்குள் உஷாரான அந்த கும்பல் காரில் ஏறி தப்பியது. அந்த கும்பல் போலி சாமியார் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து உய்யூர் தாலுகா போலீசில் மணியம்மா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அங்குள்ள பகுதிகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தப்பிய போலி சாமியார் கும்பலை தேடிவருகின்றனர்.

Related Stories: