சிகரெட் புகையை முகத்தில் விட்ட வாலிபருக்கு சரமாரியாக அடிஉதை: 2 பேர் கைது

பெரம்பூர்: சிகரெட் புகையை முகத்தில் விட்டதால் வாலிபரை சரமாரியாக அடித்துஉதைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுசம்பந்தமாக ஒருவரை ேதடி வருகின்றனர். சென்னை கொடுங்கையூர் ஓம் சக்தி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (26). இவர் மீன் வியாபாரி. நேற்றுமுன்தனம் மாலை மதுபோதையில் கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் 60 அடி சாலையில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில் அமர்ந்து சிகரெட் புகைத்துள்ளார். அப்போது அங்குவந்த 3 பேருடன் அவர் வாக்குவாதம் செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் அந்த 3 பேரும் சேர்ந்து தாக்கியதில் படுகாயம் அடைந்த வேல்முருகனை அப்பகுதியினர் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுபற்றி வேல்முருகன் கொடுத்த புகாரின்படி, கொடுங்கையூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வியாசர்பாடி பி.வி.காலனி பகுதியை சேர்ந்த ராகுல் (23), லோகேஷ் (20) ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர். விசாரணையில், வேல்முருகன் மதுபோதையில் சிகரெட் பிடித்து இவர்கள் முகத்தின் மீது புகை விட்டுள்ளார். இதை தட்டிக்கேட்டபோது ஏற்பட்ட தகராறில் 3 பேரும் சேர்ந்து வேல்முருகனை தாக்கியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: