*3 வாகனங்கள் பறிமுதல்
திருமலை : காஜிபேட்டை பகுதியில் ரூ.10.54 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் கடத்தியதாக சிறுவன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 3 வாகனங்கள் பறிமுதுல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டம் காஜிபேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாகனங்களில் செம்மரம் கடத்தப்படுவதாக எஸ்.பி. ஷெல்கே நச்சிகேத் விஸ்வநாத்திற்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வம்சிதர் தலைமையிலான போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நாகசானிபள்ளிபள்ளி கிராமத்தின் மேற்கு பகுதியில் உள்ள சில்லா கனுமா வனப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது அவ்வழியாக செம்மரக்கட்டைகளுடன் வந்த மினிவேனை மடக்கிப்பிடித்தனர். ஆனால் அதற்குள் வாகனத்தை நிறுத்திவிட்டு அதில் இருந்த நபர்கள் இறங்கி தப்பியோடினர். இருப்பினும் அவர்களை போலீசார் விரட்டிப்பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் திருப்பதியை சேர்ந்த டிரைவர் சித்தேனி பிரதாப் ரெட்டி (40), கடப்பா மாவட்டம் மைதுக்கூர் மண்டலம் வோமிபெண்டா கிராமத்தை சேர்ந்த எடகோட்டு சேசு (47), சித்தூர் மாவட்டம் வெதுருகுப்பம் பாண்டிமகேந்திரா (41), திருப்பதி ஜீவகோணா தண்டு கிருபாகுமார் (24) திருப்பதி செர்லோப்பள்ளியை சேர்ந்த கொம்மாளபதி ஹரிகிருஷ்ணா(35), மைதுக்கூர் மண்டலம் அன்னலூர் கிராமத்தை சேர்ந்த மச்சி ரெட்டி ஸ்ரீநிவாசுலா ரெட்டி (50), வோமிபெண்டா கிராமத்தை சேர்ந்த எடகோட்டு தேஜா (24) காஜிப்பேட்டை சேர்ந்த 16 வயது சிறுவன் 8 பேர் என்பதும் தெரியவந்தது.
மேலும் கல்லாவண்டலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பவன், காஜிப்பேட்டை சேர்ந்த நக்க சின்னவெங்கட சுப்பையா, பெங்களூரை சேர்ந்த பாய் மற்றும் சிலர் தப்பி ஓடி விட்டனர். கைது செய்யப்பட்ட 8 பேரிடம் இருந்து ரூ.10.54 லட்சம் மதிப்புள்ள 17 செம்மரக்கட்டைகள், 2 கார், 1 வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அனைவரையும் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர். இதையடுத்து சிறுவனை கூர்நோக்கி இல்லத்திலும் மற்ற 7 பேரை சித்தூர் சிறையில் அடைத்தனர்.
