ஊட்டி-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இறுதி கட்டத்தில் சரிவுகளில் புற்கள் வளர்க்கும் திட்டம்

ஊட்டி : நிலச்சரிவுகளை தடுக்கும் நோக்கில் ஊட்டி-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு அபாயமுள்ள இடங்களில் சாயில் நெய்லிங் பொருத்தி ஹைட்ரோ சீடிங் முறையில் புற்கள் வளர்க்கும் தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியது.நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை சமயங்களில் நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் மழை உள்ளிட்டவற்றால் பேரிடர்கள் ஏற்படும் அபாயமுள்ள பகுதிகளாக 284 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இவற்றில் மிக அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக 68 இடங்களும், அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக 89 இடங்களும், மிதமான பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 79 மற்றும் குறைந்த பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 48 என கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் நெடுஞ்சாலைத்துறைக்குட்பட்ட பகுதிகளில் 49 இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன.
வழக்கமாக, சாலைகளில் நிலச்சரிவு ஏற்படும் இடங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலம் தடுப்பு சுவர்கள் கட்டப்படுகின்றன.

இதனால் அதிக செலவு ஏற்படுகிறது. தற்போதைய சூழலில் பருவநிலை மாற்றம் மற்றும் எதிர்பாராத அதி கனமழை போன்ற காரணங்களால் நீர்வழிப்பாதைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், மண்சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. மேலும் தடுப்புச்சுவர் கட்டுவதாலும் முழுமையாக தீர்வு காண முடிவதில்லை.

இந்த நிலையில் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் அதனை தடுக்கும் நோக்கில் சோதனை முயற்சியாக தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக நீலகிரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதியில் மண்ணில் இரும்பு கம்பிகள் பொருத்தி கம்பி வலை பொருத்தி ஹைட்ரோ சீடிங் முறையில் புற்கள் வளர்த்து நிலச்சரிவை தடுக்கும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த 2021ம் டிசம்பர் மாதம் சோதனை முயற்சியாக ஊட்டி-கோத்தகிரி சாலையில் கோடப்பமந்து மற்றும் கட்டபெட்டு அருகே பாக்கியாநகர் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது. சாயில் நெய்லிங் எனப்படும் மண்ணில் 3 மீட்டர் ஆழத்திற்கு இரும்பு கம்பி அமைத்து ஜியோ கிரிட் மூலம் மண் உறுதி தன்மையை அதிகரித்து கம்பி வலைகள் விரிப்பு பொருத்தி ஹைட்ரோ சீடிங் முறையில் அதன் மீது புல் விதைகள் தூவப்படும்.

இதன் மூலம் செடிகள் நெருக்கமாக வளரும். இதன் மூலம் நிலச்சரிவு தடுக்கப்படும். இத்திட்டம் வெற்றியடைந்துள்ள நிலையில் பல்வேறு இடங்களிலும் அமைக்கப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக குன்னூர்-மேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கம் செய்யப்பட்ட 3 இடங்களில் இந்த திட்டம் கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கியது. ஹைட்ரோ சீடிங் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்றது. இப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

Related Stories: