×

மகளிர் அணியினர் 50 பேர் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்: தவெகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: புஸ்சி ஆனந்த் போனில் மிரட்டுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு

 

மாதவரம்: திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட மணலி மத்திய பகுதியை சேர்ந்த தவெக மகளிர் அணி நிர்வாகிகள் சுதர்சனம் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் சேர்ந்தனர். அப்போது தவெகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, நிர்வாகி ஒருவர் பெண்ணிடம் தவறாக பேசிய நிலையில் போலீசில் புகார் அளிக்க சென்றபோது, பொது செயலாளர் புஸ்சி ஆனந்த் போனில் மிரட்டினார் என குற்றம் சாட்டினர்.

திருவொற்றியூர் தொகுதி, மத்திய பகுதி, மணலியை சேர்ந்த தவெக மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் கல்பனா, பகுதி அமைப்பாளர் இளவரசி ஆகியோர் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த 50 பெண்கள் இன்று காலை மண்டலக்குழு தலைவரும், பகுதி செயலாளருமான ஏ.வி. ஆறுமுகம் முன்னிலையில், சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏவை சந்தித்தனர்.

அப்போது தவெகவில் பெண்களுக்கு, பாதுகாப்பு இல்லை, பணம் கொடுப்பவர்களுக்கு தான் பதவி, தவறுகளை தட்டி கேட்டால் மிரட்டுகின்றனர் என தவெக நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து இனி அக்கட்சியில் நாங்கள் இருக்க விரும்பவில்லை எனக்கூறி தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இதையடுத்து சுதர்சனம் எம்எல்ஏ, தவெகவினரை வரவேற்று சால்வை அணிவித்து திமுக உறுப்பினர் படிவத்தை வழங்கினார். அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக பதவி ஏற்க அனைவரும் பாடுபடுவோம் என உறுதி ஏற்றனர்.

பின்னர் நிருபர்களிடம் கல்பனா கூறியதாவது: மக்கள் இயக்கமாக செயல்பட்டபோது 5 ஆண்டு காலம் உறுப்பினராக இருந்து உழைத்தேன். ஆனால் பதவிகள் வழங்கும்போது பணம் பெற்றுக்கொண்டு பதவிகள் வழங்கப்படுகிறது. தவெகவில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத நிலை உள்ளது. பகுதி அமைப்பாளராக இருந்த ஒரு பெண்ணிடம் பகுதி செயலாளர் தவறாக பேசியதால் தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதுகுறித்து மாவட்ட செயலாளரிடம் கேட்டபொழுது அரசியலில் வந்து விட்டால் இதெல்லாம் சாதாரணம் என்று கூறி, தட்டிக் கழிக்கிறார். இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தபோது, கட்சியின் பொது செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் வழக்கறிஞர்கள் புகாரை திரும்ப பெறாவிட்டால் கட்சியில் நீடிக்க முடியாது. அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகும் என்று மிரட்டுகின்றனர்.

பொதுசெயலாளர் புஸ்சி ஆனந்த் தொலைபேசி மூலம் புகாரை திரும்ப வேண்டும் என மிரட்டினார். அந்த மிரட்டலுக்கு பயந்து புகாரை திரும்ப பெற்றோம். ஆனாலும் எங்களுக்கு மிரட்டல் தொடர்ந்து வந்த வண்ணமே இருந்தது. தமிழக வெற்றி கழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதை தட்டி கேட்டால் பொதுச் செயலாளரே மிரட்டுகிறார். இதனால் இந்த கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற காரணத்தால் பெண்களுக்கு பாதுகாப்பை வழங்கும் திமுகவில் இணைந்து கொண்டோம். இவ்வாறு தெரிவித்தார்.

Tags : 50 ,S. Sudharsanam ,MLA ,Davega ,Pussi Anand ,Madhavaram ,Taveka Women's Team ,Manali Central ,Thiruvotiyur ,Dimug ,Sudarsanam MLA ,
× RELATED ஈரான், இஸ்ரேல் போரால் உலக பொருளாதாரம்...