ஊட்டி : பைக்காரா படகு இல்லம் மூடப்பட்டுள்ள நிலையில் ஊட்டி படகு இல்லத்தை சுற்றுலா பயணிகள் முற்றுகையிட்டதால் ஊட்டி படகு இல்லம் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டியது.சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். அதற்கு அடுத்தப்படியாக ஊட்டியில் உள்ள படகு இல்லம் மற்றும் பைக்காரா பகுதிகளில் உள்ள படகு இல்லத்திற்கு சென்று படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.
குறிப்பாக, அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கூடலூரில் இருந்து ஊட்டி வரும்போது, பைக்காரா படகு இல்லம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ளதால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அங்கு சென்று படகு சவாரி செய்து வந்தனர். அங்கு சுற்றுலா பயணிகளுக்காக மோட்டார் படகுகள் இயக்கப்பட்டு வந்தன. அந்த படகுகள் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவைகள் கொண்டு இயக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், டீசல் மற்றும் பெட்ரோல் ஆகியவை கொண்டு இங்கு படகுகள் இயக்கப்படுவதால், அணை நீர் மாசுபடுவதாக கூறி அங்கு படகுகள் இயக்க சென்னை உயர் நீதிமன்ற தடை விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து, தற்போது பைக்காரா படகு இல்லம் மூடப்பட்டுள்ளது. அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும், அங்கிருந்து ஊட்டி வந்து தற்போது ஊட்டி ஏரியில் படகு சவாரி மேற்கொள்கின்றனர்.
இதனால், வழக்கத்தை காட்டிலும் தற்போது ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. வெகு நேரம் காத்திருந்து சுற்றுலா பயணிகள் தற்போது ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்கின்றனர்.
இதனால், ஊட்டி படகு இல்லம் தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைக்கட்டியுள்ளது. ரம்ஜான் பண்டிகை விடுமுறை மற்றும் வார விடுமுறை என நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியை முற்றுகையிட்டிருந்த நிலையில், அவர்கள் ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.
அதேசமயம், இயற்கை எழில் கொஞ்சும் பைக்காரா அணையில் படகு சவாரி மேற்கொள்ள விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளால் வாகன நெரிசல்
ரம்ஜான் பண்டிகை விடுமுறையையொட்டி ஏராளமான கேரள மாநில சுற்றுலா பயணிகள் நேற்று முன்தினம் மாலை முதல் ஊட்டியை முற்றுகையிட துவங்கியுள்ளனர். இதனால், அனைத்து சுற்றுலா தலங்களும் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களை கட்டின. நேற்று காலை முதல் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்ற சுற்றுலா தலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வலம் வந்தனர். சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகளவு வந்த நிலையில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஊட்டி-கூடலூர் சாலை உட்பட சில சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. ஊட்டி-கூடலூர் சாலையில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் திணறினர்.
நகரில் போதிய பார்க்கிங் இன்றி வாகனங்களை நிறுத்த முடியாமல் சுற்றுலா பயணிகள் கடும் அவதிப்பட்டனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருவதால், அனைத்து சாலைகளுமே வாகன நெரிசலில் தத்தளித்தது. இதனால், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
