×

குன்னூரில் கடும் நெரிசல் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு

குன்னூர் : குன்னூரில் கடும் போக்குவரத்து நெரிசல் 3 மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் ஸ்தம்பித்ததால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.​ரம்ஜான் பண்டிகை உட்பட தொடர் விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நேற்று அலைமோதியது.

இதனால் லேம்ஸ்ராக் மற்றும் டால்பின்நோஸ் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ​தொடர் விடுமுறை காரணமாக கடந்த 2 நாட்களாக சமவெளிப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குன்னூருக்கு படையெடுத்தனர்.

குறிப்பாக ​சிம்ஸ் பூங்கா பகுதியில் உள்ள ஏரியில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். பூங்காவின் இயற்கை அழகை ரசித்தபடி புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர். பசுமை போர்த்திய தேயிலைத் தோட்டங்களில் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் செல்பி எடுத்து சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர்.

குன்னூரில் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் சென்றதால், குன்னூரிலிருந்து லேம்ஸ்ராக் மற்றும் டால்பின்நோஸ் செல்லும் குறுகிய சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ​

சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்து வாகனங்கள் ஓரிடத்திலேயே நின்றதால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சாலையில் வாகனங்களை திருப்பக்கூட இடமில்லாததால் சுற்றுலா பயணிகள் முன்னால் செல்ல முடியாமலும், பின்னால் வர முடியாமலும் தவித்தனர்.

​நீண்ட நேரம் நெரிசலில் சிக்கியதால் களைப்படைந்த பல சுற்றுலா பயணிகள், லேம்ஸ்ராக் மற்றும் டால்பின்நோஸ் ஆகிய இடங்களை பார்க்காமலேயே பாதியிலேயே ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை பார்க்க முடிந்தது.

Tags : Gunnar ,Kunnur, Nilgiri district ,Ramadan festival ,
× RELATED ஈரான், இஸ்ரேல் போரால் உலக பொருளாதாரம்...