கோட்டூர்புரம் பகுதியில் மதுபாட்டில் எடுத்து வந்த கார் பறிமுதல்

 

சென்னை, மார்ச் 23: கோட்டூர்புரம் பகுதியில் அனுமதியின்றி காரில் மதுபாட்டில்கள் எடுத்து வந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 21 மதுபாட்டில்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில் சென்னையில் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள், குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருபவர்கள் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்யும் நபர்களை காவல் குழுவினர் கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் அடிப்படையில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி கூடுதல் பறக்கும்படை அதிகாரி தலைமையில் அலுவலர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் கடந்த 20ம் தேதி அன்று மாலை அடையாறு காந்தி மண்டபம் ரோடு, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை பேருந்து நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே சென்ற ஸ்கோடா காரை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து கூடுதல் பறக்கும்படை அதிகாரி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து அனுமதியின்றி காரில் மதுபாட்டில்கள் எடுத்து வந்த கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சீனிவாசன் (59) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவரிடமிருந்து 750 மி.லி. அளவு கொண்ட 9 ஒயின் பாட்டில்கள் மற்றும் 12 பீர் பாட்டில்கள் என மொத்தம் 21 மதுபாட்டில்கள் மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Related Stories: