உரிய ஆவணமின்றி ரயிலில் கொண்டு வந்த ரூ.80 லட்சம் பறிமுதல்

தண்டையார்பேட்டை, மார்ச் 13: சேலத்தில் இருந்து சென்னைக்கு உரிய ஆவணமின்றி ரயிலில் கொண்டு வந்த ரூ.80 லட்சம் ரொக்கத்தை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் விதமாக ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சேலத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் நடைமேடை 11ல் வந்து நின்றது. ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் ரகசியமாக கண்காணித்தனர். சந்தேகத்தின்பேரில் ஒரு பயணியை நிறுத்தி விசாரித்தபோது அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

இதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படையினர் அந்த பயணியிடம் இருந்த பையை சோதனை செய்தபோது கட்டுக்கட்டாக பணம் இருந்தது. தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் கேசவன் (47) என்பதும் உரிய ஆவணங்களின்றி ரூ.80 லட்சம் கொண்டு வந்ததும் தெரியவந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்த பாதுகாப்பு படையினர் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு ராதாகிருஷ்ணன் கேசவனிடம் தெரிவித்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: