வேளச்சேரி, மார்ச் 23: சென்னை கிண்டி, கணேஷ் நகரை சேர்ந்தவர் ஜீவா (18). இவர் உணவு டெலிவரி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, வேளச்சேரி, பவானி நகரில் உள்ள நண்பரை பார்க்க சென்றவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது போதையில் அங்கு வந்த ஆதம்பாக்கத்தை சேர்ந்த ஆல்பின் (20), வழி விடுவது தொடர்பாக ஜீவாவுடன் வாய் தகராறில் ஈடுபட்டார். பின்னர் ஆத்திரமடைந்த ஆல்பின் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜீவாவின் இடது காது, கையில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார்.
இதில் பலத்த காயம் அடைந்த ஜீவாவை அக்கம்பக்கத்தினர் அழைத்து சென்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவர்கள் வேளச்சேரி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் ஜீவாவிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் அவரிடம் புகாரை பெற்று வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ஆல்பினை தேடி வருகின்றனர்.
