பந்தலூர்: பந்தலூர் அருகே காட்டுத்தீ ஏற்பட்டு பல ஏக்கர் வனப்பகுதி எரிந்து சேதம் அடைந்தது. நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயில் காரணமாக வனப்பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு செடி, கொடிகள் காய்ந்து வருகின்றன. இந்நிலையில் பந்தலூர் பஜாரையொட்டி இன்கோ நகர் பகுதி உள்ளது. இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்பு அருகே உள்ள வனப்பகுதியில் நேற்று இரவு திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது.
இந்த தீ, சில நிமிடங்களில் வனப்பகுதி முழுவதும் பரவ தொடங்கியது. இதில் அரியவகை மூலிகை செடிகள், மரம், வன உயிரினங்கள் கருகின. சம்பவம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேவாலா வனச்சரக ரேஞ்சர் சஞ்சீவி மற்றும் வனத்துறையினர் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கூடலூரில் இருந்து தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
