×

பறக்கும் படை பெண் அதிகாரிக்கு பாஜ நிர்வாகிகள் மிரட்டல்: பணி செய்யவிடாமல் தடுத்ததாக போலீசார் வழக்கு

 

தூத்துக்குடி: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி கடந்த 15ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, பரிசு பொருட்களை தடுக்கும் வகையில், பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று வரை ரூ.20 லட்சம் பணம் பிடிபட்டுள்ளது. மேலும் நடிகர் விஜய் கட்சி சார்பில் கொண்டுவரப்பட்ட குக்கர் பரிசு பொருட்கள் மற்றும் கட்சியின் சின்னம், விளம்பரம் அச்சிடப்பட்ட மஞ்சப்பை என ஏராளமான பொருட்கள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தெர்மல் நகர் காவல் நிலையம் அருகேயுள்ள பாரதி நகர் அருங்காட்சியகம் முன்பு கூட்டுறவு சார்பதிவாளர் பொன்மாரி தலைமையில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக சொகுசு காரில் வந்த பாஜ பிரமுகர்கள் வாகனத்தின் முன் பகுதி முழுவதும் பாஜ துண்டுகளை விரித்து வெளியே தெரியும்படி வைத்த வண்ணம் வந்தனர். இதனால் பறக்கும்படை குழுவினர் வாகனத்தை நிறுத்தி தேர்தல் விதிகளின்படி கட்சி கொடியோ, துண்டோ வாகனத்திற்கு வெளியே தெரியும்படி வைக்க கூடாது என தெரிவித்தனர்.

இதையடுத்து வாகனத்தில் இருந்து இறங்கிய பாஜ மாநில செயலாளர் முரளி, நிர்வாகி முருகேசன் ஆகியோர் பாஜ துண்டினை எடுத்து கழுத்தில் போட்டுக் கொண்டு, தேர்தல் பறக்கும் படை அதிகாரி பொன்மாரியிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். முடிந்தால் கட்சி துண்டினை பறிமுதல் செய்து பாருங்கள். தூத்துக்குடி கலெக்டர் இளம் பகவத் தானே, அவரிடம் நான் பேசிக் கொள்கிறேன் என்று பறக்கும் படை அதிகாரியை வேலையை செய்ய விடாமல் தடுத்து அவரை மிரட்டியதோடு உடன் வந்த நபரை வைத்து வீடியோவாகவும் பதிவு செய்தார்.
பின்னர் பறக்கும்படை அதிகாரி பொன்மாரியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக அந்த வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து மன வேதனை அடைந்த அவர் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் பாஜ மாநில செயலாளர் முரளி மற்றும் முருகேசன் ஆகியோர் அரசு பணியில் இருந்தவரை தடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags : BJP ,Flying Squad ,Thoothukudi ,Tamil Nadu ,
× RELATED சமையல் காஸ் தட்டுப்பாடு தீவிரமாகிறது;...