நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் அரசியல் கட்சியினர் தேர்தல் விதிகளை மீறக்கூடாது

*அனைத்து கட்சி கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர்கள் வேண்டுகோள்

நெல்லை : அரசியல் கட்சியினர் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறக் கூடாது. அமைதியாக தேர்தல் நடத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நெல்லையில் நடந்த அனைத்து அரசியல் கட்சியினரின் கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர்கள் கேட்டுக் கொண்டனர்.தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்.23ம் தேதி நடக்கிறது.

நெல்லை மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதற்கு வெளி மாநில தேர்தல் பொது பார்வையாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் ரிஷிகேஷ் பாஸ்கர் யசோத், அனுபா வஸ்தவா, வெளி மாநில செலவு கணக்கு பார்வையாளர்களாக ஐஆர்எஸ் அதிகாரிகள் நரேந்திர ஏசரி, தீரஜ்குமார் ஜெய்ஸ்வால், வினோத்குமார் ஆகியோர் நெல்லை வந்துள்ளனர்.

இவர்கள் நேற்று காலை நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சுகுமார், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய், எஸ்பி பிரசன்னகுமார் ஆகியோர் முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது பார்வையாளர்கள் பேசியதாவது:

இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் ஏப்.23ம் தேதி தேர்தல் நடக்கிறது. மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தல் அட்டவணை வெளியிட்டதைத் தொடர்ந்து தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் விரைந்து நடந்து வருகிறது. தேர்தல் முன்னேற்பாடு பணிகளை கண்காணிக்கவும், தேர்தல் செலவினங்களை கண்காணிக்கவும் பொது தேர்தல் பார்வையாளர்களும், செலவின பார்வையாளர்களுஙம் நெல்லை மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.

அரசியல் கட்சிகள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை பொது பார்வையாளர்கள் மற்றும் செலவின பார்வையாளர்களை செல் எண் மூலம் அழைத்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். செலவினங்கள் கணக்கிடுவதற்கு தேவையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட விதிமுறைகளை மீறக் கூடாது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் கூட்டங்களை நடத்திக் கொள்வதற்கு அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

பிரசார கூட்டங்கள், ஊர்வலங்கள், தற்காலிக கட்சி அலுவலகங்கள் மற்றும் பிரசார வாகனங்களுக்கு அனுமதி பெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு https://suvidha.eci.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து பெறப்பட்ட அனுமதி ஆணையை வாகனத்தின் முன்புறத்தில் கட்டாயம் ஒட்ட வேண்டும். அனுமதி பெறாத வாகனங்களை பிரசாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது. தேர்தலை சுமூகமாக மற்றும் அமைதியான முறையில் நடத்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு பேசினர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நில எடுப்பு) சந்திரசேகர், சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பாளை. மோனிகா ராணா, சேரன்மகாதேவி ஆயுஷ்குப்தா, நெல்லை பிரியா, நாங்குநேரி சிந்து, ராதாபுரம் ராஜசெல்வி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் அனிதா (பொது), சுப்பிரமணியன் (தேர்தல்), தேர்தல் தாசில்தார் முருகன் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: