தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கோலாகலம்: சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

 

சென்னை: தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். இஸ்லாமிய மார்க்கத்தில் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பு கடைப்பிடிப்பதும் ஒன்றாகும். புனித ரமலான் மாதத்தின் போது இந்த கடமையை இஸ்லாமிய பெருமக்கள் நிறைவேற்றி வருகின்றனர். அதன்படி ரமலான் நோன்பு கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கியது.

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில், நேற்று முன்தினம் மாலை பிறை எங்கும் தென்படாததால், ‘ரம்ஜான்’ பண்டிகை மார்ச் 21ம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை ஹாஜி முஃப்தி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையக தலைமை காஜி தாவூத் கைசர் ஆகியோர் அறிவித்தனர். அதன்படி ரம்ஜான் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து உற்றார் உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி கட்டி அணைத்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். ஏழை எளிய மக்கள் மற்றும் நண்பர்களுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கினர். மேலும் சில இடங்களில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் இஸ்லாமியர்கள் வழங்கினர். ரம்ஜானை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பிராட்வே டான்போஸ்கோ பள்ளி மைதானத்தில் இன்று காலை 7.55 மணிக்கு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொழுகைக்கு பிறகு மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ பெருநாள் உரை நிகழ்த்தினார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான திடல்களில் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. வட சென்னை மாவட்டம் மண்ணடி அரண்மனைக்காரன் தெரு, பின்னி கார் பார்க்கிங் திடலில் நடைபெற்ற தொழுகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத்தலைவர் ஆர்.அப்துல் கரீம் கலந்து கொண்டு குத்பா உரை ஆற்றினார். இத்தொழுகையில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இது போன்று சென்னை மண்டலத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பாக திடல்களில் பெருநாள் தொழுகை நடைபெற்றது.

இதே போல, சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் திருவல்லிக்கேணி, பெரியமேடு, ராயப்பேட்டை, மயிலாப்பூர், அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். தொழுகையை நிறைவு செய்து விட்டு வெளியே வந்த இஸ்லாமியர்கள் ஏழைகளுக்கு புத்தாடை, உணவு பொட்டலங்கள், பணம் உள்ளிட்டவற்றை தானமாக வழங்கினர். ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்ற இடங்கள் மற்றும் பள்ளிவாசல்களின் வெளியே பாதுகாப்பு கருதி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories: