சென்னை : இறைச்சிக்கடையில் பணியாற்றுபவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள வேடந்தாங்கல் ஈரநிலப் பறவைகள் கூண்டில் சில பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையோடு விலங்குகள் மற்றும் பறவைகளை கையாள வேண்டுமென சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு;
* பறவைக் காய்ச்சல் பரவலால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தமிழ்நாட்டில் மனிதர்களுக்கு இதுவரை பறவைக்காய்ச்சல் பாதிப்பு இல்லை.
* இருமல், சளி, காய்ச்சல், சுவாசப்பிரச்னை போன்றவை பறவைக்காய்ச்சலுக்கான அறிகுறிகள். இருமல், சளி பாதிப்பு கொண்டவர்கள் சுய மருந்துகள் உட்கொள்ளாமல் அருகிலுள்ள அரசு மருத்துவரை அணுகுவது அவசியம்.
* இறைச்சிக் கடையில் பணியாற்றுபவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். இறைச்சிக் கழிவுகளை பொதுவெளியில் கொட்டக்கூடா.து
* பறவைகள் இறந்து கிடந்தால், உடனடியாக கால்நடைத் துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
* கைகளை கழுவுதல் உட்பட தன்சுத்தம் மற்றும் சுற்றுப்புறத்தினை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
* முழுமையாக சமைக்கப்படாத, சரிவர சமைக்கப்படாத முட்டை, இறைச்சி வகைகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.
* பறவை காய்ச்சல் சம்பந்தமான வதந்திகளை நம்ப வேண்டாம்.
* பறவை காய்ச்சல் குறித்த கூடுதல் தகவல்களுக்கு தொலைபேசி எண் 104-ஐ தொடர்புகொள்ளவும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
