×

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தி.மலை கோவிலில் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும் இலவச லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம்!!

திருவண்ணாமலை : வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அண்ணாமலையார் கோவிலில் பக்தர்களுக்கு விநியோகம் செய்யக்கூடிய இலவச லட்டு பிரசாத விநியோகம் முற்றிலும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த லட்டுகள் அனைத்தும் கோவில் நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்படுவதுடன், முறுக்கு, அதிரசம், எல்லடை ஆகிய பிரசாதங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தநிலையில், இஸ்ரேல் – இரான் போர் காரணமாக தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால் பல ஹோட்டல்களின் உணவு மெனுக்களை குறைத்தும், சில ஹோட்டல்களையும் மூடியும் உள்ளனர்.அதே போல் திருவண்ணாமலை கோவிலில் இலவச லட்டு தயாரிக்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு தயாரித்து வழங்குவதை நிறுத்தியுள்ளது. மேலும், விற்பனைக்காக தயார் செய்யப்படும் முறுக்கு, அதிரசம். எல்லடை ஆகியவையும் நிறுத்தப்பட்டுள்ளன. அடுத்து, விறகு அடுப்பு மூலம் லட்டு தயாரிக்க அரசின் அனுமதியை கோவில் நிர்வாகம் கேட்டுள்ளதாக தெரிகிறது. அனுமதி கிடைத்தவுடன் விறகு அடுப்பு மூலம் லட்டு தயாரிக்கும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Thiruvannamalai ,Tiruvannamalai ,Annamalaiyar temple ,Arunachaleswarar ,
× RELATED ரூபாய் மதிப்பு கடும் சரிவு, தொழில்துறை...