சென்னை: தமிழக தேர்தல் பொறுப்பாளரும் ஒன்றிய அமைச்சருமான பியூஷ் கோயலின் இன்றைய சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டது. அதிமுக – பாஜக இடையிலான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதற்காக சென்னை வர இருந்தார். 4 நாட்களில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று சென்னைக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.
வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இக்கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு இதுவரை இறுதியாகவில்லை. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த (மார்ச்.19) டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி, 4 நாட்களில் அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் எனத் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில் தமிழக தேர்தல் பொறுப்பாளரும் ஒன்றிய அமைச்சருமான பியூஷ் கோயலின் இன்றைய சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பியூஷ் கோயல் இன்று சென்னை வர இருந்தார். டெல்லியில் உள்ள டிடிவி தினகரன், அன்புமணியை அமித்ஷா இதுவரை சந்திக்காத நிலையில் பியூஷ் கோயல் பயணம் ரத்து செய்யப்பட்டது. தேஜகூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் தொடர்ந்து அமித் ஷாவை சந்தித்து வருகின்றனர்.
