×

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!!

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுவதையொட்டி, சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தில் 72,032 வாக்குச்சாவடி மையங்களும், 41 வாக்கு எண்ணிக்கை மையங்களும் அமைக்கப்படவுள்ளது. இந்த நிலையில், வாக்குச்சாவடியில் மேற்கொள்ள உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து காவல்துறை ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஆகியோருடன் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை மேற்கொண்டார். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளை அடையாளம் காணுவது, வாக்குச்சாவடி மையங்களில் துப்பாக்கி ஏந்திய காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது தொடர்பாகவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.

துணை ராணுவ படையினரை எந்தெந்த பகுதிகளில் பணியமர்த்துவது,வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு என்பது குறித்தும் அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை மேற்கொண்டார். சிஆர்பிஎஃப் ஒருங்கிணைப்பு அதிகாரி, தமிழ்நாடு காவல் ஒருங்கிணைப்பு அதிகாரி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சுமார் 20,000 துணை ராணுவ படையினர் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர். சட்டமன்றத் தேர்தலுக்கு பாதுகாப்பு பணிக்காக தமிழ்நாட்டுக்கு 300 கம்பெனி துணை ராணுவ படை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 50 துணை ராணுவ படை கம்பெனிகள் வந்துள்ள நிலையில் 250 கம்பெனிகள் விரைவில் வரவுள்ளன.

Tags : Chief Election Officer ,Archana Budnayak ,Tamil Nadu Assembly Election ,Chennai ,Tamil Nadu Assembly ,Assembly General Election ,Tamil Nadu ,
× RELATED உலகில் 9 கோள்கள் இருந்தாலும்...