ஜெப்ரீ எப்ஸ்டீன் தொடர்பு முதல்முறையாக ஒப்பு கொண்ட நார்வே பட்டத்து இளவரசி

ஆஸ்லோ: சர்வதேச பாலியல் குற்றவாளி ஜெப்ரீ எப்ஸ்டீனுடனான தொடர்பு குறித்து நார்வே இளவரசி மெட்டே மாரிட் முதல் முறையாக பேட்டியளித்தார். அமெரிக்காவில் பெரும் பணக்காரரான ஜெப்ரி எப்ஸ்டீன், சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். தற்போது அவரின் குற்ற செயல்கள் அடங்கிய சுமார் 30 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் அடங்கிய எப்ஸ்டீன் கோப்புகளை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது.

அதில் மாஜி அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் , தற்போதைய அதிபர் டிரம்ப் உள்ளிட்டோர் பெயர்கள் பதிவாகியுள்ளன.பிரிட்டிஷ் அரச குடும்பத்தை சேர்ந்த ஆண்ட்ரூ, தொழிலதிபர்கள் எலான் மஸ்க், பில் கேட்ஸ், அனில் அம்பானி உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. எப்ஸ்டீன் கோப்புகளில் நார்வே இளவரசி மெட்டே மாரிட்டின் பெயரும் இருந்தது. இதில் அவர் மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை என்றபோதிலும் இது வெளியாகி பல மாதங்கள் ஆன நிலையிலும் மெட்டே மாரிட் அது பற்றி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், நார்வே தொலைக்காட்சிக்கு இளவரசர் ஹாகோனுடன் சேர்ந்து பேட்டியளித்தார். அப்போது அவரிடம் எப்ஸ்டீனுடன் இருந்த தொடர்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மெட்டே, எப்ஸ்டீனை முதன்முதலில் 2011-ல் சந்தித்தேன். 2014 வரையிலும் தொடர்பு இருந்தது. அவர் ஒரு பாலியல் குற்றவாளி. பெண்களை துஷ்பிரயோகம் செய்பவர் என்பது தெரியாது. அவர் பெரியவர்களுடன் பழகுவதை மட்டுமே பார்த்தேன். சட்டவிரோதமான எதையும் காணவில்லை. எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களை நினைக்கையில் குற்ற உணர்ச்சி ஏற்பட்டுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டுகளை பல ஆண்டுகளாக சிந்தித்து வருகிறேன். அவரது பின்னணி குறித்து முழுமையாக ஆராயாமல் பழகியதற்கு நானே பொறுப்பு என்றார்.

Related Stories: