அமெரிக்காவில் உயர்பாதுகாப்பு மிக்க பகுதியில் அத்துமீறல் அமைச்சர்கள் வீடுகளின் மேல் டிரோன்கள் பறந்ததால் பதற்றம்: ஈரான் அச்சுறுத்தலா? விசாரணை

வாஷிங்டன்: அமெரிக்காவின் உயர்மட்ட அமைச்சர்கள் வசிக்கும் ராணுவ குடியிருப்பு பகுதிக்கு மேல் மர்மமான முறையில் டிரோன்கள் பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் போர்ட் மெக்நாயர் என்ற ராணுவ தளம் உள்ளது. இங்கு, அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, பாதுகாப்பு துறை அமைச்சர் பீட் ஹெக்செத் ஆகியோரின் அதிகாரப்பூர்வ இல்லங்கள் அமைந்துள்ளன. இந்த அமைச்சர்களின் வீடுகளுக்கு மேல் ஒரே இரவில் பல டிரோன்கள் பறந்தது.

உயர்பாதுகாப்பு மிக்க பகுதியில், அதுவும் அமெரிக்க வான்வெளியில் அத்துமீறி பறந்த இந்த டிரோன்களால் பதற்றம் உருவானது. உடனே பாதுகாப்பு துறை அதிகாரிகள், அவற்றை சுட்டு வீழ்த்த முயன்றனர். ஆனால் அதற்குள் அங்கு மாயமாகின. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த டிரோன்கள் அனைத்தும் வெளிநாட்டு தயாரிப்புகள் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் உயர்மட்ட பாதுகாப்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில், மார்கோ ரூபியோ, பீட் ஹெக்செத் ஆகியோரை வேறு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற அதிகாரிகள் ஆலோசித்தனர்.

இருப்பினும், அவர்கள் அங்கேதான் இருக்கிறார்கள். இந்நிலையில், நியூ ஜெர்சியில் உள்ள ஜாயிண்ட் பேஸ் மெக்குயர்-டிக்ஸ்-லேக்ஹர்ஸ்ட் மற்றும் புளோரிடாவில் உள்ள மேக்டில் விமானப்படை தளம் ஆகியவற்றில் பாதுகாப்பு நிலை உயர்த்தப்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, இத்தகைய டிரோன் அச்சுறுத்தல்களை ஈரான் விடுத்திருக்கலாம் என பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்.பி.ஐ) தெரிவித்துள்ளது. இந்த டிரோன்கள் எங்கிருந்து வந்தன, யாரால் இயக்கப்படுகின்றன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இதுகுறித்து புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

* ஒரே இரவில் 9 நாடுகள் மீது ஈரான் தாக்குதல்
ஈரான் நேற்று ஒரே நாளில் வளைகுடாவின் 9 நாடுகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. கடந்த 19 நாள்களில் 500க்கும் மேற்பட்ட அணுஆயுத ஏவுகணைகள், 2,000 டிரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், ‘ஈரானுக்கு ஏற்படக்கூடிய நீண்டகால விளைவுகள் காரணமாக தீவிர ராணுவ நடவடிக்கைக்கு அங்கீகாரம் அளிக்க விரும்பவில்லை. கத்தார் மீது ஈரான் புதிய தாக்குதல்களை தொடுத்தால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும். கத்தாரின் எல்பிஜி ஆலை மீண்டும் குறிவைக்கப்பட்டால், அவ்வாறு செய்ய தயங்க மாட்டேன்’ என்றார்.

* ஹார்முஸ் ஜலசந்திக்கு போக்குவரத்துக் கட்டணங்களை விதிக்க ஈரான் திட்டம்
ஈரான் போரால் ஹார்முஸ் ஜல சந்தி மூடப்பட்டுள்ளதால் உலகம் முழுவதும் எரிபொருள் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதையடுத்து பல்வேறு நாட்டு தலைவர்கள் ஈரான் உதவியை நாடி வருகிறார்கள். இந்த நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்குப் போக்குவரத்துக் கட்டணங்களை விதிப்பது குறித்து ஈரான் பரிசீலித்து வருவதாகவும், இந்த முக்கிய வர்த்தகப் பாதையைப் பயன்படுத்தும் ஈரானுக்கு எதிரான நாடுகளுக்கு எதிராக சாத்தியமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஈரான் அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

* போருக்காக கூடுதலாக ரூ.18 லட்சம் கோடி நிதி
ஈரான் போருக்காக கூடுதலாக ரூ.18 லட்சம் கோடி நிதி ஒதுக்க கேட்டு அமெரிக்க பாதுகாப்புத்துறையிடம் பென்டகன் கோரிக்கை வைத்துள்ளது. பாதுகாப்புத் துறை இந்தக் கோரிக்கையை வெள்ளை மாளிகைக்கு அனுப்பியுள்ளது. இது மிக மிக அதிகமான தொகையாகும். மேலும், கடந்த ஆண்டு அதிபர் டிரம்பின் பெரிய வரிக்குறைப்பு மசோதாவில் பாதுகாப்புத் துறை ஏற்கனவே பெற்ற கூடுதல் நிதியை விட கூடுதலாக வருகிறது. ஈரான் போருக்கான புதிய செலவினக் கோரிக்கைக்கு அரசு தயாராகி வருகிறது. ஆனால் வெள்ளை மாளிகை இந்தக் கோரிக்கையை பரிசீலனைக்கு அனுப்பியுள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்தச் செலவினக் கோரிக்கைக்கு ஆதரவு கிடைக்குமா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. இதுபற்றி பாதுகாப்புச் அமைச்சர் பீட் ஹெக்செத் கூறுகையில்,’ கெட்டவர்களைக் கொல்ல பணம் தேவைப்படுகிறது. ஈரானின் தலைவிதி அமெரிக்க ராணுவத்தின் கைகளில் உள்ளது’ என்றார்.

* பலி 1300ஐ தாண்டியது
ஈரான் மீதான போர் தற்போது 3வது வாரத்தை தாண்டியுள்ளது. இந்த போரில் தற்போது வரை 1300 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர். லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக லெபனான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில், ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பலியாகி 15 பேர் உயிரிழந்துள்ளனர். குறைந்தது 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Related Stories: