திருச்செங்கோடு, மார்ச் 21: திருச்செங்கோட்டில், கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளம்போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நகரில் பெய்த மழையின் காரணமாக வெள்ள நீர் கொல்லப்பட்டி பகுதியில் உள்ள வயல்களில் தேங்கியது. மேலும், நகரில் குளிர்ந்த சூழல் நிலவியது. திருச்செங்கோட்டில் 28 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கோடை மழையானது கம்பு மற்றும் சோளம், மரவள்ளி ஆகிய பயிர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
